Last Updated : 31 Dec, 2018 08:49 AM

 

Published : 31 Dec 2018 08:49 AM
Last Updated : 31 Dec 2018 08:49 AM

கட்கரியை பிரதமராக முன்னிறுத்த ஆர்எஸ்எஸ் திட்டம்?

2019 மக்களவை தேர்தலில் நரேந்திர மோடிக்கு பதிலாக நிதின் கட்கரியை பிரதமராக முன்னிறுத்த ஆர்எஸ்எஸ் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்எஸ்எஸ், கட்சி மற்றும் அரசு விவகாரங்களில் நேரடியாகத் தலையிடுவதில்லை. எனினும், மறைமுகமான ஆலோசனைகள் கூறுவது உண்டு. எனவே, ஆர்எஸ்எஸ் அமைப்பின் மூத்த தலைவர்களிடம் சில மாநிலங்களின் முக்கியஸ்தர்கள் நேரிலும், கடிதம் எழுதியும் வற்புறுத்தி வருகின்றனர். இதில், ஒன்றாக மகாராஷ்டிராவின் விவசாயிகளின் முக்கியத் தலைவரான கிஷோர் திவாரி ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு கடிதம் எழுதியிருப்பதாகக் தெரியவந்துள்ளது. இவர் மகாராஷ்டிரா அரசின் ‘வசந்தராவ் நாயக் சேத்தி ஸ்வாலம்பன் மிஷன்’ எனும் அமைப்பின் தலைவராகவும் உள்ளார். கிஷோர் திவாரி தனது கடிதத்தில் குறிப்பிடுகையில், ‘கர்வம் படைத்த தலைவர்கள் சிலரால் நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டப்பேரவைகளின் தேர்தலில் பாஜகவிற்கு தோல்வி கிடைத்துள்ளது. பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் பெட்ரோல் விலை உயர்வு போன்ற பிரச்சினைகளால் நாட்டிற்கும், மக்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, உடனடியாக மத்திய கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியை பிரதமராக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் 2019 தேர்தலில் பாஜகவுக்கு தனிமெஜாரிட்டி கிடைப்பது கடினம் எனவும்கட்சியின் ஒரு பகுதியினரிடையே கருத்து உள்ளது. தோழமைக்கட் சிகளும் கூட்டணியில் இருந்து வெளியேறும் நிலை ஏற்பட்டு வருவதாகவும் அவர்கள் சுட்டிக் காட்டி இருந்தனர். இதனால், நிதின் கட்கரியை பிரதமராக்க வேண்டும் என சில மாதங்கள் முன்பே பேச்சு எழுந்தது. இப்போது, மூன்று மாநிலங்களில் ஆட்சியை இழந்த பின் அந்தக் கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் ஆர்எஸ்எஸ் வட்டாரம் கூறும்போது, ‘‘ஆர்எஸ்எஸ் தலைவர்களால் பிரதமராக்கப்பட்ட மோடி, நாங்கள் கூறுவதை காதில் போட்டுக் கொள்வதில்லை. தனது சகாவான அமித்ஷாவுடன் சேர்ந்து கட்சி மற்றும் அரசில் செலுத்தும் ஆதிக்கம் அதிகமாகி உள்ளது. சிவசேனா, அகாலிதளம் உள்ளிட்ட முக்கியக் கூட்டணிக் கட்சிகளும் இருவருக்கும் எதிராகத் திரும்பி வருவதால் தயாராக உள்ள மாற்று யோசனை மக்களவை தேர்தல் சமயத்தில் அமலாக்கப்படலாம்.’ எனத் தெரிவித்தனர்.

ஆர்எஸ்எஸ் தலைமையகம் அமைந்துள்ள மகாராஷ்டிராவின் நாக்பூரை சேர்ந்தவர் கட்கரி. இவருக்கு ஆர்எஸ்எஸ் தலைவர்களுடன் நெருக்கமான தொடர்பும், நட்பும் உள்ளது.சில நாட்களுக்கு முன், பிரதமர் மோடி மற்றும் பாஜகதலைவர் அமித்ஷாவை மறைமுகமாக கட்கரி விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. நாக்பூரின் ஒரு கூட்டத்தில் பேசிய கட்கரி, ‘தோல்விக்கு பொறுப்பேற்க எவரும் முன்வர வில்லை. வெற்றி பெற்றால் மட்டும் தாம் தான் அதன் காரணம் என மார்தட்டிக் கொள்கின்றனர்’ என எவர் பெயரையும் குறிப்பிடாமல் பேசியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x