

பிஹாரில் நீண்ட இழுபறிக்கு பிறகு பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. ஒவ்வொரு கட்சிகளுக்குமான தொகுதி எண்ணிக்கையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிஹாரில் மொத்தம் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 தேர்தலில் தேசிய ஜன நாயகக் கூட்டணியில் பாஜக 29, ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்திக்கு 7 மற்றும் குஷ்வாஹாவின் ராஷ்டிரிய லோக் சமதா கட்சி 4 தொகுதிகளில் போட்டியிட்டன. இதில், பாஜக விற்கு 22, பாஸ்வானுக்கு 6, குஷ்வாஹாவுக்கு 3 தொகுதிகள் கிடைத்தன.
தே.ஜ.கூட்டணியில் பிஹார் முதல் அமைச்சர் நிதிஷ் குமார் மீண்டும் இணைந்து விட்டார். இதனால், அவரது ஐக்கிய ஜனதா தளத்திற்கும் இடம் ஒதுக்க வேண்டி இருப்பதால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் எழுந்தது. எனவே குறைந்த தொகுதிகளை ஒதுக்க பாஜக திட்டமிட்டது. இதற்கு ராம் விலாஸ் பாஸ்வான் மற்றும் குஷ்வாஹா எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதிருப்தியடைந்த குஷ்வாஹா, மத்திய அமைச்சர் பதவியில் இருந்தும், பாஜக கூட்டணியில் இருந்தும் வெளியேறினார். இந்த நிலையில் பிஹாரில் பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து இன்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.
டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை சந்தித்து, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் ஆகியோர் தொகுதி பங்கீட்டை இறுதி செய்தனர். இதன்படி மொத்தமுள்ள 40 தொகுதிகளில் பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் தலா 17 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மீதமுள்ள 6 தொகுதிகளில் ராம் விலாஸ் பாஸ்வானில் லோக் ஜனசக்தி போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் ராம் விலாஸ் பாஸ்வான் போட்டியிடவில்லை. மாறாக அடுத்து வரும் மாநிலங்களவை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் அவர் போட்டியிடுவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.