Last Updated : 19 Dec, 2018 12:56 PM

 

Published : 19 Dec 2018 12:56 PM
Last Updated : 19 Dec 2018 12:56 PM

‘வரும், ஆனா ‘லேட்டா வரும்’: ரூ.15 லட்சம் டெபாசிட் குறித்து மத்திய அமைச்சர் பதில்

மக்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம், ஆனால், சிறிது தாமதமாக வரும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே விளக்கம் அளித்தார்.

2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய மோடி, அரசை ஏமாற்றி, வரி ஏய்ப்பு செய்து வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கிய கறுப்புப் பணம் மீட்கப்படும். அவ்வாறு மீட்கப்படும்போது, ஒவ்வொரு இந்தியர்கள் வங்கிக்கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

கடந்த நான்கரை ஆண்டுகளாகப் பிரதமர் மோடியின் இந்த வாக்குறுதியை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. ஆனால், மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படவில்லை.

கறுப்புப் பணமும் வெளிநாட்டு வங்கிகளில் இருந்து மீட்கப்படவில்லை. இதனால், மக்களை பாஜக அரசு பொய்யான வாக்குறுதி அளித்து தவறாக வழிநடத்திவிட்டது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

சமீபத்தில் ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பாஜக தலைவர் அமித் ஷா, ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வது என்பது தேர்தலுக்காகச் சொல்லப்படும் வெற்றுவார்த்தை என்று தெரிவித்தார். மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூட சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில், "நாங்கள் மக்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்று தேர்தலுக்காக 'சும்மா' கூறினோம். அதை மக்கள் நம்பிவிட்டார்கள்" என்று தெரிவித்தார்.

இதனால், பிரதமர் மோடி அளித்த ரூ.15 லட்சம் வாக்குறுதி என்பது பொய்யானது என்று மக்கள் நம்பத் தொடங்கிட்டார்கள். இந்நிலையில், மத்திய அரசு மக்களுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றப்போவதாக மத்திய சமூக நீதித்துறை இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மத்தியில் உள்ள தேசிய ஜனநாயகக்கூட்டணியில், ராம்தாஸ் அத்வாலேவின் இந்திய குடியரசுக் கட்சி அங்கம் வகித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூரில் நேற்று நிருபர்களுக்கு மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேட்டி அளித்தார்.

அப்போது, அவரிடம் மக்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சத்தை எப்போது மத்திய அரசு செலுத்தும் என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு ராம்தாஸ் அத்வாலே பதில் அளிக்கையில், “ மக்கள் ஒவ்வொருவரின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படும் என்று பாஜக அளித்த வாக்குறுதிப்படி மக்களுக்கு வந்து சேரும்.

ஆனால், ஒரே முறையில் மொத்தமாக ரூ.15 லட்சம் கிடைக்காது. மாறாக, சிறிது, சிறிதாக மெதுவாக ரூ.15 லட்சம் மக்களுக்கு வரும். ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் கேட்டிருக்கிறோம். அவர்கள் இன்னும் வழங்கவில்லை, அதனால் பணத்தை வசூலிக்க முடியவில்லை. பணத்தை வசூலிப்பதில் சில தொழில்நுட்பச் சிக்கல்கள் இருக்கின்றன” என ராம்தாஸ் அத்வாலே தெரிவித்தார்.

மக்களின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் வந்து சேரும் என்ற மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலேவின் வாக்குறுதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அத்வாலேவின் பேச்சை வைத்து சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் கிண்டல் செய்தும், விமர்சித்தும் வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x