Last Updated : 28 Dec, 2018 03:28 PM

 

Published : 28 Dec 2018 03:28 PM
Last Updated : 28 Dec 2018 03:28 PM

கால்நூற்றாண்டாக கிடப்பில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுங்கள்: மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிஜேடி வலியுறுத்தல்

25 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை நிறைவேற்ற வேண்டும் என்று மக்களவையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பிஜு ஜனதா தளம் எம்.பி.க்கள் அரசை வலியுறுத்தினார்கள்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 2008-ம் ஆண்டு ஆட்சியில் இருந்த மகளிருக்குச் சட்டப்பேரவை, நாடாளுமன்றத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த மசோதா கடந்த 2010-ம் ஆண்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டாலும், மக்களவையில் தோல்வி அடைந்தது. குறிப்பாக சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் இந்த மசோதாவுக்குமக்களவையில் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததால், நிறைவேற்ற முடியாமல் போனது.

இதேப்போன்று கடந்த 1990-களில் மூன்று முறை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டும் ஆதரவு இல்லாமல் தோல்வி அடைந்தது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சமீபத்தில் அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுக்கும் எழுதிய கடிதத்தில், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை அனைத்துச் சட்டப்பேரவைகளிலும் நிறைவேற்றி ஆதரவைத் தெரிவியுங்கள் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று காலை மக்களவை தொடங்கியதும், நாடாளுமன்றம் முன்பு இருக்கும் காந்தி சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி.க்கள் அனைவரும் போராட்டம் நடத்தினார்கள். மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதன்பின் மக்களவை கூடியதும், கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி. பி.கே. சிரீமதி டீச்சர் பேசுகையில், “ மக்களவையில் பெண்களின் பங்கு 11.7 சதவீதமாகவும், மாநிலங்களவையில் 11.4 சதவீதமாகவும் இருக்கிறது.

இதேபோன்றுதான் மாநிலச் சட்டப்பேரவைகளிலும் பாலினப்பாகுபாடு அதிகரித்துள்ளது. மக்களவை சபாநாயகர் பெண் என்பதால், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.

குறிப்பாக உயர்மட்ட முடிவுகள் எடுக்கும் கூட்டத்தில், பெண்கள் பங்களிப்பு குறைவாக இருப்பது பெண்களுக்கான உரிமையை மறுக்கும் செயலாகும். கடந்த கால்நூற்றாண்டாக கிடப்பில் இருக்கும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

இந்த மசோதாவை விரைவாக நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமரையும், மற்ற அமைச்சர்களையும் வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்தார்.

இந்த மசோதாவுக்கு பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்.பி. பாரத்ருஹாரி மஹ்தப் ஆதரவு தெரிவித்துப் பேசினார். அவர் பேசுகையில், “ 27 அரசியல் கட்சிகளுக்கு எங்கள் முதல்வர் நவீன் பட்நாயக் கடிதம் எழுதி, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு கோரியுள்ளார். டீச்சர் கூறிய கருத்துக்களை நான் ஆதரிக்கிறேன். இந்த மசோதா குறித்துவிவாதிக்க வேண்டும். பிரதமர் மோடிக்கு இதுதொடர்பாக நவீன் பட்நாயக்கும் கடிதம் எழுதியுள்ளார் “ எனத் தெரிவித்தார்.

மேலும், தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் எம்.பி. ஏ.பி. ஜிதேந்திர ரெட்டியும் ஆதரவு தெரிவித்துப் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x