Published : 31 Dec 2018 02:06 PM
Last Updated : 31 Dec 2018 02:06 PM

நாளை ‘இங்கிலீஷ் டே’: புத்தாண்டை வித்தியாசமாக வரவேற்கும் கர்நாடக அரசுப் பள்ளிகள்

கர்நாடக மாநிலத்தில் மைசூரூ மாவட்டத்தில் உள்ள 339 அரசுப் பள்ளிகளில் ஆங்கிலப் புத்தாண்டை உற்சாகமாக வரவேற்கும் வகையில் நாளை 'இங்கிலீஷ் டே' கொண்டாடுகின்றனர்.

அதாவது 339 அரசுப் பள்ளிகளில் படிக்கும் 26 ஆயிரம் மாணவ, மாணவிகளும் நாளை ஒருநாள் மட்டும் ஆசிரியர்கள், சக நண்பர்கள், பார்க்கும் மக்கள் அனைவரிடமும் ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என்பதாகும்.

மைசூரூ மாவட்டம், டி நர்சிப்பூர் தாலுக்காவில் உள்ள அரசுப் பள்ளிகளில் இந்தத் திட்டம் நாளை ஒருநாள் மட்டும் செயல்படுத்தப்பட உள்ளது. அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆங்கில அறிவை வளர்க்கும் வகையில் இந்தப் புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இது குறித்து மைசூரூ மாவட்டத்தின் பொதுக்கல்வி மையத்தின் துணை இயக்குநர் எஸ்.மமதா கூறுகையில், “அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் ஆங்கில அறிவை வளர்க்கும் திருவிழாவின் ஒரு பகுதியாகவே நாளை ஒருநாள் மட்டும் 339 அரசுப் பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் மட்டுமே பேச அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்காக மாணவர்களுக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது.

339 பள்ளிகளிலும் நாளை காலை இறை வணக்கம் தொடங்கிய பின் நடக்கும் அனைத்து வகுப்புகள், கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், மாணவர்களுடன் உரையாடல் அனைத்துமே ஆங்கிலத்தில் மட்டுமே நடக்கும். 339 அரசுப் பள்ளிகளில் பயிலும் 26 ஆயிரம் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். கிராமப்புற மாணவர்களின் ஆங்கில அறிவை வளர்க்க மட்டுமே இந்தத் திட்டம் கொண்டு வரப்படுகிறது” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x