Last Updated : 23 Dec, 2018 10:04 AM

 

Published : 23 Dec 2018 10:04 AM
Last Updated : 23 Dec 2018 10:04 AM

பம்பையில் பதற்றம்: சென்னை பெண்கள் சபரிமலை செல்லும் வழியில் தடுத்து நிறுத்தம்

சென்னையைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 11 பேர் கொண்ட குழு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வழியில் இன்று அதிகாலை பம்பையில் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இதனால், பம்பையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்தப் பெண்களை மலை ஏறவிடாமல் பக்தர்கள் “ஐயப்ப நாமஜெபத்தை” கூறி கோஷமிட்டு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு இந்து அமைப்புகள், பாஜகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால், சபரிமலையில் அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் 144 தடை உத்தரவு போடப்பட்டு, போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் திருநங்கைகள் 4 பேர் சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்ய முயன்றபோது போலீஸாரால் தடுக்கப்பட்டனர். அதன்பின் மறுநாள் உயர் நீதிமன்ற குழுவினர் முறையிட்டதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் திருநங்கைகள் 4 பேரும் சாமி தரிசனம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து, சென்னையைச் சேர்ந்த “மனிதி” எனும் பெண்கள் நல அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமையில் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் 11 பேர் சபரிமலைக்கு நேற்றுச் சென்றனர். இந்த 11 பேரில் 8 பேர் முறைப்படி விரதம் இருந்து இருமுடி கட்டிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் இருந்து தமிழக எல்லையான கம்பம்மேடு, இடுக்கி வழியாகப் பம்பைக்கு இன்று காலை 3.30 மணிக்குச் சென்றனர்.

தமிழகத்தில் இருந்து 50வயதுக்குட்பட்ட பெண்கள் வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோட்டயம் ரயில் நிலையத்தில் ஐயப்ப பக்தர்கள் இரவு முழுவதும் காத்திருந்து, தமிழகப் பெண்களை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் சாலை மார்க்கமாக பம்பையைச் சென்று அடைந்தனர். இந்த விஷயம் போலீஸாருக்கு அறிந்ததும் பம்பையில் தமிழக பெண் பக்தர்களைத் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு அவர்களை திரும்பிச் செல்லுமாறு கூறினார்கள்.

ஆனால், உச்ச நீதிமன்ற தீர்ப்பைச் சுட்டிக்காட்டி, மனிதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செல்வி, சாமி தரிசனம் செய்யாமல் திரும்பமாட்டோம் என்று தெரிவித்துவிட்டார். இதனால் பதற்றம் அதிகமானது.

மனிதி அமைப்பில் உள்ள உறுப்பினர் திலகவதி என்பவர் கூறுகையில், “ சாமி ஐயப்பனைத் தரிசனம் செய்யும் வரை நாங்கள் பம்பையில் இருந்து செல்லமாட்டோம். பம்பையில் உள்ள கோயில் அர்ச்சகர் கூட எங்களுக்கு இருமுடிகட்டு கட்ட உதவி செய்ய மறுத்துவிட்டார்.

எங்களில் 8 பெண்கள் முறைப்படி விரதம் இருந்து, சபரிமலைக்கு வந்துள்ளார்கள். அவர்கள் இருமுடியுடன் வந்துள்ளதால், 18படிகள் ஏறி சாமி தரிசனம் செய்ய உள்ளனர். எங்களுடன் தமிழகம், கேரளா, மத்தியப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பெண்களும் வந்துள்ளனர் ” எனத் தெரிவித்தார்.

சென்னையைச் சேர்ந்த பெண்கள் சபரிமலைக்கு செல்வதால், அவர்களுக்கு வழி எங்கும் ஐயப்ப பக்தர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மனிதி ஒருங்கிணைப்பாளர் செல்வி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “ நாங்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வது குறித்து முதல்வர் பினராயி விஜயனுக்குக் கடிதம் மூலம் தெரிவித்துவிட்டோம். முறையான பாதுகாப்பு கோரியுள்ளோம். எங்களுடன் கேரளா, மத்தியப்பிரதேசம், ஒடிசா,கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்களும் உள்ளனர். ஐயப்பனைத் தரிசிக்காமல் நாங்கள் செல்லமாட்டோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x