

கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையிலான மஜத - காங்கிரஸ் கூட்டணி அரசில், காங்கிரஸை சேர்ந்த ரமேஷ் ஜார்கிஹோளி நகர மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தார்.
இந்த ஆட்சியில் மும்பை - கர்நாடக பகுதிக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை எனக்கூறி ரமேஷ் ஜார்கிஹோளி போர்க்கொடி தூக்கினார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார், அவர் மீது காங்கிரஸ் மேலிடத்தில் புகார் அளித்தார்.
இதனால் அதிருப்தி அடைந்த ரமேஷ் ஜார்கிஹோளி அரசுக்கு எதிராக தனது ஆதரவு எம்எல்ஏக்கள் 20 பேருடன் ரகசிய ஆலோசனை நடத்தினார். எனவே முதல்வர் குமாரசாமி கடந்த 22-ம்தேதி ரமேஷ் ஜார்கிஹோளியை அமைச்சரவையில் இருந்து நீக்கினார். அதற்கு பதிலாக அவரது சகோதரர் சதீஷ் ஜார்கிஹோளிக்கு அமைச்சர் பதவி வழங்கினார்.
இதனால் அதிருப்தி அடைந்த ரமேஷ் ஜார்கிஹோளி தனது ஆதரவு எம்எல்ஏக்களுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். அப்போது காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைய அவர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் ரமேஷ் ஜார்கிஹோளி, ‘‘எனது எம்எல்ஏ பதவியை விரைவில் ராஜினாமா செய்யப் போகிறேன். இன்னும் 4 நாட்கள் பொறுத்திருங்கள். என் எதிரிகளுக்கு தக்க பாடம் புகட்டுவேன்'' என நேற்று பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா நேற்று அவசர பயணமாக பெலகாவிக்கு சென்றார். அங்குள்ள தன் நண்பர் ஒருவரின் பண்ணை வீட்டில் ரமேஷ் ஜார்கிஹோளியை எடியூரப்பா ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார். அப்போது பாஜகவில் இணைய அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.