Published : 05 Dec 2018 06:43 PM
Last Updated : 05 Dec 2018 06:43 PM
நான் இந்தியாவில் வாடகைக்கு குடியிருக்கவில்லை, இந்தியாவின் முதல்தர குடிமகன், அனைவருக்கும் சமமான குடிமகன் என்று எம்ஐஎம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான அசாசுதீன் ஓவைசி, உ.பி. முதல்வருக்குப் மீண்டும் பதிலடி கொடுத்துள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தாந்தூர் பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.அப்போது அவர் பேசுகையில், “தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், ஹைதராபாத் நிஜாம் தப்பி ஓடியதைப் போலவே, ஓவைசி எம்.பி.யும் ஹைதராபாத்தில் இருந்து தப்பி ஓடிவிடுவார்’’ என்று பேசினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஓவைசி, ‘‘இந்தியா என் தகப்பன் வாழ்ந்த நாடு, தகப்பன் நாடு. என்னை இங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேறச் சொல்ல யாராலும் முடியாது’’ என்று ஆவேசமாக கூறினார்.
இந்தநிலையில் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜகவின் பிரசாரத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று மீண்டும் ஓவைசி கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
நான் இந்தியாவின் முதல்தர குடிமகன். மற்றவர்களுக்கு சமமான குடிமகன். நான் வாடகைக்கு குடியிருப்பவன் அல்ல. நான் யோகியை போல அல்ல. இந்தியன் என்பது எனது விருப்பத் தேர்வு.
ஜின்னாவின் கொள்கைகளை நாங்கள் ஏற்கவில்லை. இந்தியா எங்கள் சொந்த பூமி என்பதை எப்போதும் உறுதியுடன் முழங்கி வருகிறோம். எங்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்த முடியாது. முஸ்லிம்கள் சரிசமமான குடிமக்கள் இல்லை என்பதும், முஸ்லிம்களை பாரபட்சமாக நடத்துவதும் தான் பாஜகவின் கோட்பாடு’’ எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT