Last Updated : 20 Dec, 2018 09:44 PM

 

Published : 20 Dec 2018 09:44 PM
Last Updated : 20 Dec 2018 09:44 PM

உண்மையில் ஹனுமன் ஒரு முஸ்லிம்: உ.பி.யின் பாஜக மேலவை உறுப்பினர் கருத்தால் சர்ச்சை

ஹனுமர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் கூறி உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிய சர்ச்சை முடிவிற்கு வந்தபாடில்லை. அம்மாநில மேலவையின் பாஜக உறுப்பினரான புக்கல் நவாப் (64), ''உண்மையில் ஹனுமன் ஒரு முஸ்லிம்'' என இன்று கூறியுள்ளார்.

தனது இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் புக்கல் நவாப் இன்று லக்னோவில் கூறும்போது, ''முஸ்லிம்களில் அர்மான், ரஹமான், ரம்ஜான், பர்மான், ஜிஷான், ரெஹான் எனப் பெயரிடப்படுகின்றன. இதை ஒட்டியபடி ஹனுமன் என்ற பெயரும் உள்ளது. இதனால், உண்மையில் ஹனுமன் ஒரு முஸ்லிம். இதுபோன்ற உச்சரிப்பில் இந்துக்களின் பெயர்கள் கிடையாது'' எனத் தெரிவித்தார்.

இது குறித்து புக்கல் மேலும் கூறுகையில், ''ஹனுமர் உலக நாட்டு மக்கள் அனைவரையும் சேர்ந்தவர். அவரை உலகின் அனைத்து மதத்தினரும், ஒவ்வொரு பிரிவினரும் நேசிக்கின்றனர். இதில் என்னுடைய நம்பிக்கையின்படி ஹனுமர் ஒரு முஸ்லிம்'' எனக் கூறியுள்ளார்.

ராஜஸ்தானின் அழ்வரில் நவம்பர் 27-ல் பிரச்சாரம் செய்த உ.பி. முதல்வர் யோகி தன் மேடையில் இந்துக்கடவுளான ஹனுமர் மிகவும் பிற்படுத்தப்பட்டவர் எனக் கூறி இருந்தார். இதனால், கிளம்பிய சர்ச்சையால் உ.பி.யின் ஹனுமர் கோயில்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அமைப்பான ‘பீம் ஆர்மி’யினர் தமது நிர்வாகத்தின் கீழ் ஆக்கிரமிக்கத் தொடங்கினர்.

அக்கோயில்களில் உள்ள பிராமணப் புரோகிதர்களை அகற்றி அங்கு ஒரு தம் சமூகத்தினரை அமர்த்த முயன்றனர். இதையடுத்து, யோகி தன் கருத்தில் இருந்து பின்வாங்கும் வகையில் சமாளித்தபடி மறுப்பு தெரிவித்தார். எனவே, யோகியின் தலைவலி முடிவை எட்டிவிட்ட நிலையில் புக்கல் நவாபின் கருத்து மேலும் பல விமர்சனங்களுக்கு வழிவகுத்து விட்டது.

ஹனுமர் மீது பாஜகவின் உட்கட்சிப் பூசல்

இது குறித்து 'இந்து தமிழ் திசை' இணையதளத்திடம் உ.பி.யின் எதிர்க்கட்சியான சமாஜ்வாதியின் எம்எல்சி ராஜ்பால் காஷ்யாப் கூறும்போது,  ''உ.பி.யின் துணை முதல்வர் தினேஷ் சர்மா நமது சீதா மாதா ஒரு டெஸ்ட் டியூப் பேபி எனக் கூறினார். முதல்வர் யோகி ஹனுமரை மிகவும் பிற்படுத்தப்பட்டவர் என்றார். அவர்களது கட்சியின் எம்எல்சியான நவாப் இப்போது, ஹனுமார் ஒரு முஸ்லிம் என்கிறார்.

இதுபோல், ஹனுமர் எந்த சாதி, மதத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டறிவதில் பாஜக தலைவர்களுக்கு உட்கட்சிப் பூசல் எழுந்துள்ளது. இதன் வெளிப்பாடாக ஒவ்வொருவரும் ஹனுமரை தன் எண்ணங்களுக்கு ஏற்ற வகையில் ஹனுமரின் சமூகத்தைக் குறிப்பிடுகிறார்கள்'' எனத் தெரிவித்தார்.

ஹனுமரால் தண்டிக்கப்படுவர்

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் உ.பி. மாநில காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளரான அகிலேஷ் பிரதாப் சிங் கூறும்போது, ''ஹனுமர் எந்த சாதி, மதத்தைச் சேர்ந்தவர் என்பதை பாஜக முடிவு செய்து விட்டு இறுதியாக அறிவிக்க வேண்டும்.  நம் அனைவரும் அறிந்தவரையில் ஹனுமர் ஒரு கடவுள். இவரை இந்த சாதி, மதம் எனக் குறிப்பிட்டு பாஜக பாவம் செய்து வருகிறது. இதற்காக அவர்கள் ஹனுமரால் தண்டிக்கப்படுவார்கள்'' எனத் தெரிவித்தார்.

யார் இந்த புக்கல் நவாப்?

உ.பி.யின் ஷியா பிரிவு முஸ்லிமான புக்கல் நவாப், அங்குள்ள அவத் பகுதி நவாப் குடும்பத்தைச் சேர்ந்தவர். சமாஜ்வாதி கட்சியில் இருந்து சமீபத்தில் பாஜகவிற்கு மாறிய நவாபிற்கு பாஜக உ.பி. மேலவையின் எம்எல்சி உறுப்பினராக்கி சமீபத்தில் கவுரவித்தது.

இதன் வேட்புமனு தாக்கலுக்குச் சென்றபோது புக்கல், லக்னோவின் ஹஸ்ரத்கன்சிலுள்ள பிரபல ஹனுமன் கோயிலில் தரிசனம் செய்தார். இத்துடன், அதற்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள வெண்லக மணியையும் நன்கொடையாக அளித்திருந்தார்.

இதனால், புக்கல் நவாபின் நடவடிக்கைகள் உ.பி. முஸ்லிம்கள் இடையே சர்ச்சையைக் கிளப்பின. இவரை இஸ்லாத்தில் இருந்து ஒதுக்கி வைப்பதாக உ.பி.யின் தியோபந்தில் உள்ள மதரஸாக்களில் ஒன்றான அஷ்ரபியா அப்போது, ஃபத்வா(சட்ட விளக்கம்) அளித்திருந்தது.

இதற்கு முன் சமாஜ்வாதியில் இருந்த போது 2017-ல் புக்கல், அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் எனவும், அதற்காக தாம் ரூபாய் 15 கோடி நன்கொடை அளிப்பதாகவும் அறிவித்து சர்ச்சைக்குள்ளானார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x