Published : 18 Dec 2018 12:55 PM
Last Updated : 18 Dec 2018 12:55 PM

காங்கிரஸில் இருந்து விலகினார் சஜ்ஜன் குமார்: சீக்கியர் கலவர வழக்கில் ஆயுள் தண்டனை எதிரொலி

சீக்கியர்கள் எதிரான கலவர வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி சுட்டுக்கொல்லப் பட்டார்.  அவர் சீக்கிய காவலர்களால் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் தொடர்பான வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜ்ஜன் குமார் உள்ளிட்டோருக்கு எதிராக புகார் எழுந்தது.

முன்னாள் எம்.பி.யான சஜ்ஜன் குமார் மீது மேற்கு டெல்லியில் உள்ள ஜானக்புரி, விகாஸ்புரி ஆகிய காவல் நிலையங்களில் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. கடந்த 1984-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி, சோகன் சிங், அவரது மருமகன் அவதார் சிங் என்ற 2 சீக்கியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் ஜானக்புரி காவல் நிலையத்திலும் மறுநாள் குர்சரண் சிங் என்ற சீக்கியர் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவத்தில் விகாஸ்புரி காவல் நிலையத்திலும் சஜ்ஜன் குமாருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்கில் தீர்ப்பளித்த உச்ச நிதிமன்றம் சஜ்ஜன் குமார் மீதான குற்றச்சாட்டுக்களை நேற்று உறுதி செய்தது. அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பையடுத்து காங்கிரஸை, பாஜகவும், அகாலிதளமும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

இந்தநிலையில் குற்றவழக்கில் தண்டனை பெற்றுள்ளதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதாக சஜ்ஜன் குமார் அறிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், தண்டனை பெற்றுள்ளதால் கட்சியில் நீடிக்க விரும்பவில்லை என்றும், காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் உடனடியாக  விலகுவதாகவும் அதில் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x