Last Updated : 26 Dec, 2018 04:04 PM

 

Published : 26 Dec 2018 04:04 PM
Last Updated : 26 Dec 2018 04:04 PM

டெல்லி, உ.பி.யில் என்ஐஏ திடீர் ரெய்டு: ஐஎஸ். தீவிரவாத ஆதரவு அமைப்பைச் சேர்ந்த 10 பேர் கைது

டெல்லி மற்றும் உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பினர்(என்ஐஏ) இன்று நடத்திய திடீர் ரெய்டில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவு தெரிவித்து இந்தியாவில் புதிய அமைப்பை உருவாக்க முயற்சித்தாக சந்தேகப்படும் 10 பேரைக் கைது செய்தனர்.

டெல்லி, உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக ‘ஹர்கத் உல் ஹர்ப் இ இஸ்லாம்’ என்ற அமைப்பை சிலர் உருவாக்கியுள்ளதாகத் தேசிய புலனாய்வு அமைப்புக்கு(என்ஐஏ) ரகசிய தகவல் கிடைத்தது. மேலும், இந்த அமைப்பினர் வடமாநிலங்களில் திடீர் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக டெல்லியில் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து உத்தரப்பிரதேசம், டெல்லியில் ஆகிய இரு மாநிலங்களில் 16 இடங்களில் ஒரேநேரத்தில் தேசிய புலனாய்வுப் படையினர் இன்று அதிரடியாக ரெய்டு நடத்தினர்.

 

உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டம், லக்னோ, சிம்போலி உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலும், டெல்லியின் கிழக்குப்பகுதி, ஜபாராபாத் பகுதிகளிலும் இன்று ரெய்டு நடத்தப்பட்டது.

உத்தரப்பிரதேசத்தில் தீவிரவாத ஒழிப்புப்படையினர் ஆதரவுடனும், டெல்லியில் சிறப்பு பிரிவு போலீஸார் ஆதரவுடனும் இந்த சோதனை நடந்தது.

இந்த ஆய்வில் ‘ஹர்கத் உல் ஹர்ப் இ இஸ்லாம்’ அமைப்பைச் சேர்ந்த 10 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் என்ஐஏ அமைப்பினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹா மாவட்டத்தில் நடத்தப்பட்ட ரெய்டில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து ஒரு கைதுப்பாக்கி, கையெறி குண்டுகள், சில புத்தகங்கள் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இவர்களிடம் தேசிய புலனாய்வு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின் முடிவில் எங்கெல்லாம் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளனர், திட்டங்கள் என்ன உள்ளிட்ட விவரங்கள் அறியவரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x