Last Updated : 20 Dec, 2018 08:47 AM

 

Published : 20 Dec 2018 08:47 AM
Last Updated : 20 Dec 2018 08:47 AM

வெளிநாடுகளுக்கு கடத்த முயற்சி; 3 சிலைகளை மீட்ட எல்லை பாதுகாப்பு படையினர்

வெளிநாடுகளுக்கு கடத்த முயன்ற 3 பழங்கால சிலைகளை எல்லைப் பாதுகாப்புப் படையினர் மீட்டுள்ளனர்.

மேற்கு வங்க மாநிலத்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பகுதி சிலிகுரி. இங்கு நேபாளம் மற்றும் வங்கதேச நாடுகளின் எல்லைகள் அமைந்திருக்கின்றன. அப்பகுதியில் சிலர் சிலைகளை கடத்திச் செல்வதாக எஸ்எஸ்பி படையினருக்கு (சீமா சுரக் ஷா பல்) தகவல் கிடைத்தது.

இதன்பேரில், அங்கு எஸ்எஸ்பி படையினர் நேற்று முன்தினம் இரவு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த ஒருவரை சோதனை செய்தபோது, அவர் கொண்டு வந்திருந்த சாக்கு பையில் முருகன், சரஸ்வதி, புத்தர் ஆகிய 3 பழங்கால சிலைகள் இருந்தன. விசாரணையில், அவர் அங்குள்ள கோர்சிங்ஜோத்தே பகுதியைச் சேர்ந்த தக் ஷயலால் ராய் என்பது தெரியவந்தது.

அவரையும், கைப்பற்றப்பட்ட சிலைகளையும் கார்பாரி காவல் நிலையத்தில் எஸ்எஸ்பி படையினர் ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, தக் ஷயலாலை கைது செய்த கார்பாரி போலீஸார், அவரிடம் கைப்பற்றப்பட்ட சிலைகள் குறித்து டார்ஜிலிங்கில் உள்ள வடக்கு பெங்கால் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையினரிடம் கருத்து கேட்டிருந்தனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் வடக்கு பெங்கால் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை பேராசிரியர்கள் கூறும்போது, ‘பார்வதியின் மடியில் முருகன், சரஸ்வதி மற்றும் புத்தர் என மூன்று சிலைகள் உள்ளன. இந்த வகை சிலைகள், வட இந்தியாவில் கிடையாது. எனவே, அவை தென்னிந்தியக் கோயில் அல்லது அருங்காட்சியகங்களை சேர்ந்தவையாக இருக்கும்’ எனத் தெரிவித்தனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் எஸ்எஸ்பி அதிகாரிகள் கூறும்போது, ‘தற்போது பிடிபட்ட சிலைகள், சீனா வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்த திட்டமிட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்’ எனத் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x