Published : 28 Dec 2018 10:36 AM
Last Updated : 28 Dec 2018 10:36 AM

அசாம் குடிமக்கள் பதிவேட்டை மேம்படுத்த 6 மாதம் அவகாசம்

அசாமில் தேசிய குடிமக்கள் பதிவேட்டை (என்ஆர்சி) மேம்படுத்தும் பணியை முடிக்க மத்திய அரசு மேலும் 6 மாதம் அவகாசம் வழங்கி உள்ளது.

எல்லையில் அமைந்துள்ள அசாம் மாநிலத்தில் வங்கதேசம் உள்ளிட்ட வெளிநாட்டினர் சட்டவிரோதமாக குடியேறி வருகின்றனர். இதைத் தடுக்க வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கை. இதையடுத்து, சட்டவிரோதமாக குடியேறியவர்களை அடையாளம் காண்பதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேட்டை 3 ஆண்டுகளில் தயாரிக்க வேண்டும் என மத்திய அரசு 2013-ல் உத்தரவிட்டது. அதன் பிறகு இந்த காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் என்ஆர்சி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. மாநிலத்தில் சுமார் 3.29 கோடி மக்கள் வசிக்கின்றனர். இதில் 2.9 கோடி பெயர்கள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றிருந்தன.

வெளிநாட்டினராகக் கருதி சுமார் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டதால் சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து, வரைவு பட்டியலில் விடுபட்டவர்கள், என்ஆர்சி பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்கக் கோரி உரிய ஆதாரத்துடன் விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 31 வரை அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பிறகு இறுதி பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய பதிவாளர் ஜெனரல் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டை மேம்படுத்தும் பணி இன்னும் முழுமை அடையவில்லை. எனவே, இந்தப் பணியை முடிக்க 2019-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x