Last Updated : 13 Apr, 2014 03:19 PM

 

Published : 13 Apr 2014 03:19 PM
Last Updated : 13 Apr 2014 03:19 PM

மத்திய அரசில் ‘கிங்மேக்கர் ஆக விரும்பும் மம்தா: எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என நம்பிக்கை

மக்களவை தேர்தலில் எந்த கூட்டணிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலை ஏற்பட்டால், ‘கிங் மேக்கர்’ ஆகும் திட்டத்தில் உள்ளார் மேற்கு வங்க முதல் வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.

மக்களவை தேர்தலில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு இரண்டாவது இடம் கிடைக்கும் எனக் கருதப்படுகிறது. முதலிடம் எதிர்பார்க்கும் பாரதிய ஜனதா கூட்டணிக்கும் தனிப் பெரும் பான்மை கிடைக்காது எனக் கூறும் புள்ளி விவரங்களும் உண்டு.

இதனால், தங்கள் கூட்டணியில் இல்லாத மற்ற கட்சிகள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்க திட்டமிடுகிறது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி. இதை ஆமோதிக்கும் வகையில், மத்திய அமைச்சரான ஏ.கே.அந்தோனி, மக்களவை தேர்தலுக்கு பின் இடதுசாரிகளின் ஆதரவை கோர இருப்பதாக கூறியிருந்தார்.

இது குறித்து டெல்லியின் அரசியல் வட்டாரங்கள் தி இந்து விடம் கூறுகையில், ‘தனது உதவி காங்கிரஸுக்கு தேவைப்படும் என மம்தா கருதுகிறார். இதற்கு வலுவான காரணமும் உண்டு. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சியில் உள்ள ஹேமந்த் சோரன் அரசு கவிழும் ஆபத்து நிலவு கிறது. ஏனெனில் சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் இருவரும் மம்தாவின் கட்சியில் இணைந்து அக்கட்சி சார்பில் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதனால், ஜார்க்கண்ட் அரசின் பிடி இப்போது மம்தாவிடம் சிக்கியுள்ளது’ என கூறுகின்றனர்.

மத்தியில் காங்கிரஸுக்கு தனது உதவி தேவைப்படும் போது மம்தா பேரம் பேசுவார் எனவும், அவரது கட்சி வேட்பாளர்கள் பல மாநிலங்களில் போட்டியிடுவதால் அதிக மக்களவைத் தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் எனவும் அந்த வட்டாரம் கருத்து கூறுகிறது.

இது குறித்து ஜார்க்கண்டில் பிரச்சார மேடைகளில் மம்தா பேசுகையில், ‘ஜார்க்கண்டில் ஆளும் ஹேமந்த் சோரன் அரசுக்கு காங்கிரஸுடன் சேர்ந்து ஆதரவு அளித்து வரும் சுயேச்சை உறுப்பினர்களில் இருவர் திரிணமூல் காங்கிரஸில் இணைந்து விட்டனர். இதனால், நான் நினைத்தால் ஜார்க்கண்ட் அரசை தூக்கி வெளியே எறியலாம். ஆனால், தேர்தலுக்கு பின் மத்தியில் என்ன நிகழ்கிறது என்பதை பொறுத்து முடிவு எடுப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். 81 தொகுதிகள் கொண்ட ஜார்க் கண்டில் ஹேமந்திற்கு 43 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு உள்ளது. மக்களவை தேர்தலில் ஜார்க்கண் டின் 12 எம்.எல்.ஏ.க்கள் போட்டியிடு கின்றனர். இவர்களில் பெரும்பாலா னோர் வெற்றி பெற்றால், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய் வார்கள். அப்போது சோரன் ஆட்சி கவிழும் ஆபத்து உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x