Published : 27 Dec 2018 11:18 AM
Last Updated : 27 Dec 2018 11:18 AM

இனி பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்: நடைமுறைக்கு வரும் டிராய் புதிய விதிமுறைகள்

வாடிக்கையாளர்கள் டிடிஎச் சேவையில் தாங்கள் பார்க்கும் சேனல்களுக்கு ஏற்ப மட்டும் பணம் செலுத்தினால் போதுமானது என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் (TRAI) புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இந்த விதிமுறை வரும் 29-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.

ஒளிபரப்பு மற்றும் கேபிள் சேவைகளுக்கான புதிய விதிமுறைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் நேற்று வெளியிட்டது. அதில் இந்த விவரம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிமுறைகளால் வாடிக்கையாளர்கள் தற்போது பார்த்து வரும் சேனல் சேவையில், எந்தவிதத்திலும் இடையூறுகளைச் சந்திக்கமாட்டார்கள் என்று டிராய் தெளிவாகத் தெரிவித்துள்ளது.

இதற்கு முன் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மாதம் ஒரு தொகுப்பான கட்டணத்தை டிடிஎச் சேவைக்குச் செலுத்தி வந்திருப்பார்கள். அதில் தங்களுக்கு விருப்பமான சேனல்களும் இருக்கும், பார்க்க விரும்பாத, மொழிபுரியாத சேனல்களும் இருந்திருக்கும்.

ஆனால், இனிமேல், அவ்வாறு தேவையில்லை. வாடிக்கையாளர்கள் தாங்கள் எந்த சேனலைப் பார்க்க விரும்புகிறார்களோ அந்த சேனலைத் தேர்வு செய்து அதற்குரிய மாதாந்திரக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இதற்காக ஒளிபரப்பாளர்கள் ஒவ்வொரு சேனலின் தனிப்பட்ட மாதாந்திர வாடகை விவரத்தையும், ஒட்டுமொத்த மாதாந்திர விவரத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று டிராய் வெளியிட்ட புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிராய் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

''டிசம்பர் 29-ம் தேதிக்குப் பின் டிராயின் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், ஏற்கெனவே மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பல்வேறு சேனல்கள் சேவை நிறுத்தப்படும் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவருகிறது. தற்போது வாடிக்கையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் சேனல்களில் எதையுமே 29-ம் தேதிக்குப் பின்பு துண்டிக்கக் கூடாது என்று அனைத்து ஒளிபரப்பு சேவைதாரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களின் நலன் கருதி மாதாந்திர கட்டண விவரத்தை எளிதாக டிராய் மாற்றி அமைத்துள்ளது. இந்த மாதாந்திர வாடகைத் திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சேவையை மட்டும் தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ள அருமையான வாய்ப்பாகும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான கூடுதல் கட்டணமும் வராது.

வாடிக்கையாளர்கள் தங்களின் குடும்பத்தின் தேவைக்கு ஏற்றார்போல், கவனமாக தங்களுக்குப் பிடித்தமான சேனல்களைத் தேர்வு செய்து அதற்குரிய மாதாந்திர வாடகையை மட்டும் செலுத்தலாம். அல்லது சேவைதாரர்கள் வழங்கும் பேக்கேஜ் முறையையும் தேர்வு செய்யலாம்.

மேலும் 100 சேனல்களுக்கு அதிகபட்சமாக ரூ.130 வரை கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கலாம். இதில் ப்ரீ ஏர் சேனல், கட்டணம் செலுத்தி பார்க்கும் சேனல் அல்லது இரண்டும் சேர்த்ததாகக் கூட இருக்கலாம். ஒருவேளைகட்டணம் செலுத்திப் பார்க்கும் சேனலாக இருந்தால், கூடுதல் தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியது இருக்கும்.

இந்தப் புதிய விதிமுறையின்படி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையில்லாத சேனல்களைப் பார்க்கும் வகையில் வற்புறுத்தத் தேவையில்லை. தங்களுக்கு விருப்பப்பட்ட சேனல்களை மட்டும் தேர்வு செய்து அதற்கு மட்டும் பணம் செலுத்தலாம்''.

இவ்வாறு டிராய் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x