Published : 28 Dec 2018 08:59 AM
Last Updated : 28 Dec 2018 08:59 AM

வீட்டுப் பாடம் எழுதாத 5-ம் வகுப்பு மாணவர்களை ஆடையின்றி நிற்க வைத்து தண்டனை: தனியார் பள்ளியின் அங்கீகாரம் ரத்து

ஆந்திராவில் வீட்டுப்பாடம் எழுதாத 5-ம் வகுப்பு மாணவர்கள் 6 பேரை 1 மணி நேரம் ஆடையின்றி நிற்க வைத்த தனியார் பள்ளியின் அங்கீகாரத்தை மாநில அரசு ரத்து செய்துள்ளது.

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் சைதன்ய பாரதி என்ற தனியார் பள்ளி உள்ளது. ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கும் இந்தப் பள்ளியில் சுமார் 150 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் 5-ம் வகுப்பு மாணவர்கள் 6 பேர், வகுப்புக்கு வெளியே வெயிலில் ஆடையின்றி சுமார் 1 மணி நேரம் நிற்க வைக்கப்பட்டனர்.

வீட்டுப் பாடம் எழுதாததாலும் பள்ளிக்கு தாமதமாக வந்ததாலும் மாணவர்களுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

பெற்றோர்கள் புகார்

சக மாணவர்களின் கேலிக்கு ஆளானதால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பெற்றோரிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பியுள்ளனர். பிறகு புங்கனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இப்புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீஸார், பள்ளி நிர்வாகி நாகராஜு நாயுடுவை கைது செய்தனர். இந்த விவகாரத்தில் 3 ஆசிரியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்தப் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கல்வி அதிகாரி நேற்று அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x