Last Updated : 29 Dec, 2018 05:16 PM

 

Published : 29 Dec 2018 05:16 PM
Last Updated : 29 Dec 2018 05:16 PM

விவசாயிகளே எச்சரிக்கை, காங்கிரஸ் ஒரு லாலிபாப் கம்பெனி : பிரதமர் மோடி தாக்கு

காங்கிரஸ் ஒரு லாலிபாப் கம்பெனி, விவசாயிகள் மீது காங்கிரஸ் கட்சிக்கு முழுமையான அக்கறை கிடையாது என்று பிரதமர் மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாகச் சாடினார்.

பிரதமர் மோடி உத்தரப்பிரதேசத்தில் உள்ள தனது வாரணாசி தொகுதிக்கு இருநாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளார். உ.பி மாநிலத்தின் கிழக்குப்பகுதி மண்டலமான காஜிப்பூரில் இன்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். அதன்பின் அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

காங்கிரஸ் கட்சியிடம் எச்சரிக்கையாக இருங்கள். காங்கிரஸ் கட்சிக்கு உண்மையாகவே உங்கள் மீதும், விவசாயிகள் மீதும் அக்கறை இல்லை. காங்கிரஸ் ஒரு ‘லாலிபாப் கம்பெனி’.

குறுகிய காலத்துக்கு நீங்கள் பலன் பெறும் வகையிலான அறிவிப்புகளை வெளியிட்டு உங்களை காங்கிரஸ் கட்சி ஏமாற்றுகிறது. அது உங்களுக்குப் பயன் அளிக்காது.

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநிலங்களில் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி என்று காங்கிரஸ் அறிவித்தது. கர்நாடகாவில் லட்சக்கணக்கான விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி என்று கூறிவிட்டு, ஆயிரக்கணக்கான விவசாயிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் வாக்குறுதிகள் அனைத்தும் மக்களை முட்டாளாக்கும் வாக்குறுதிகள்.

மத்தியப்பிரதேசத்தில் விவசாயிகள் யூரியா வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன் கள்ளச்சந்தைக்காரர்கள் வந்துவிட்டார்கள். பொய்யான, நிழல் வாக்குறுதிகளை நம்பிக்கை மக்கள் விலை கொடுத்து வருகிறார்கள்.

விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி என்ற வாக்குறுதிகளை அளித்து, அவர்களை ஏமாற்றி புறவாசல் வழியாக காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. சிறு குழந்தைகளுக்கு ‘லாலிபாப் சாக்லேட்’ கொடுப்பதுபோல் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடியை அளித்து அவர்களின் வாக்குகளைத் திருடியுள்ளது காங்கிரஸ் கட்சி.

ஆனால், இந்தக் காவல்காரன் எதையும் உங்களிடம் இருந்து எதையும் திருடர்கள் திருடிச் செல்வதை அனுமதிக்கமாட்டான். உங்களுக்கான திட்டங்களுக்கான பலன் உரியநேரத்தில் வந்து சேரும். இந்தக் காவல்காரர் இரவு, பகல் பாராமல் உங்களுக்காக உழைத்து வருகிறேன். உங்களின் நம்பிக்கையைப் பெற்று இருக்கிறேன். நான் விழிப்பாக இருப்பதால், திருடர்கள் தூக்கமில்லாமல் அலைகிறார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x