

5 மாநில தேர்தல் முடிவுகளில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில் பாஜக தரப்பிலிருந்து பிரதமர் மோடியே தோல்வி குறித்து தொடர் ட்வீட்களில் தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
சத்திஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது, மத்திய பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சியே ஆட்சி அமைக்க வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.
இந்நிலையில் தோல்வி பற்றி பிரதமர் மோடி தொடர் ட்வீட்களில் கூறியிருப்பதாவது:
மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்றுக் கொள்கிறோம். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலங்களில் நாங்கள் சேவை செய்ய மக்கள் வாய்ப்பளித்தார்கள் அவர்களுக்கு எங்கள் நன்றிகள். இந்த மாநிலங்களில் பாஜக அரசு மக்கள் நலன்களுக்காக ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் உழைத்தது.
காங்கிரஸ் கட்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள். தெலங்கானாவில் அதிரடி வெற்றிபெற்ற கேசிஆருக்கு என் வாழ்த்துக்கள், அதே போல் மிசோரமில் எம்.என்.எஃப். கட்சிக்கும் என் வாழ்த்த்துக்கள்.
பாஜக தொண்டர்களின் குடும்பத்தினர் மாநில தேர்தல்களுக்காக பகலிரவு பாராமல் உழைத்தனர். அவர்கள் கடின உழைப்புக்காக நான் வணங்குகிறேன். வெற்றி தோல்வி வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதி.
இன்றைய முடிவுகள் மக்களுக்கு இன்னும் சேவை செய்ய வேண்டும் என்ற எங்கள் உறுதியை மேலும் வலுப்படுத்தும். மேலும் நாட்டுக்காக இன்னும் கடுமையாக உழைக்க எங்களைத் தூண்டும்.
இவ்வாறு கூறினார் பிரதமர் மோடி.