

சபரிமலையில் ஆந்திரம் மாநிலத்தைச் சேர்ந்த இரு இளம் பெண் பக்தர்கள் நேற்று நுழைய முயன்றனர். அவர்களை சிலர் தடுத்து நிறுத்தி சரண கோஷமிட்டு பரபரப்பு ஏற்படுத்தியதையடுத்து, போலீஸார் இரு பெண்களையும் அழைத்துச் சென்றனர்.
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களும் சாமி தரிசனம் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துக் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், இந்தத் தீர்ப்புக்கு எதிராகக் கேரள மாநிலத்தில் கடந்த இரு மாதங்களாகப் போராட்டம் நடந்து வருகிறது, இந்து அமைப்புகள், பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் திறக்கப்பட்டுள்ளது. அங்கு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க சபரிமலையில் போலீஸார் ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ளனர். அங்கு 144-தடை உத்தரவும் போடப்பட்டுள்ளது.
போலீஸாரின் பல்வேறு கெடுபிடிகளால், மகரவிளக்கு சீசன் தொடங்கியும் பக்தர்கள் கூட்டம் குறைவாக இருந்தது, கடந்த சில நாட்களாக மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இருப்பினும், 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை சபரிமலைக்குள் நுழைவதற்குப் பக்தர்கள், போராட்டக்காரர்கள் தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 50 வயதுக்கும் குறைவான இரு பெண் பக்தர்கள் நேற்று பம்பையில் இருந்து சபரிமலைக்குச் சென்றனர். ஒருகிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மரக்கூட்டம் பகுதிக்கு வந்ததும் இரு பெண்களையும் செல்ல விடாமல் போராட்டக்கார்கள் தடுத்து சரண கோஷமிட்டனர். இதனால் அங்குச் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அதன்பின் அங்குச் சென்ற போலீஸார் இரு பெண் பக்தர்களையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஒரு குண்டூர் மாவட்டம் நவோஜம்மா(வயது26), மற்றொருவர் கிரிபாவதி(42) கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
மேலும்40-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சேர்ந்து வந்துள்ளதாகவும், அவர்கள் பம்பையில் இருப்பதாகவும் அந்த இரு பெண்களும் தெரிவித்தனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் பாதுகாப்புடன் போலீஸார் பம்பைக்கு அனுப்பி வைத்தனர்.
பெண் பக்தர்களை செல்லவிடாமல் தடுத்த மகேஷ், சுபாஷ் , சந்தோஷ் ஆகியோர்களை போலீஸார் கைது செய்தனர்.