Last Updated : 07 Dec, 2018 03:05 PM

 

Published : 07 Dec 2018 03:05 PM
Last Updated : 07 Dec 2018 03:05 PM

‘அயோத்தியில் பாபர் மசூதி மீண்டும் கட்டப்படும்’அலிகர் பல்கலைக்கழக சுவரொட்டியால் சர்ச்சை

அயோத்தியில் இந்துத்துவாவினரால் டிசம்பர் 6, 1992-ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதி நினைவு தினம் நாடு முழுவதிலும் அனுசரிக்கப்பட்டது. இந்தவகையில், மசூதி அங்கு மீண்டும் கட்டப்படும் என எழுதி அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டியால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

இது, உபியின் அலிகரில் சுமார் 150 வருடங்களுக்கு முன் சர் சையது அகமது கான் என்பவரால் துவக்கப்பட்டது. பிறகு மத்திய பல்கலைக்கழகமாக மாறிவிட்டதில் சுமார் 37,000 மாணவ, மாணவிகள் கல்வி பயில்கின்றனர். இவர்களில் பெரும்பாலனவர்கள் முஸ்லிம்கள்.

இந்நிலையில் நேற்று அதன் மாணவர்கள் மற்றும் மாணவிகளால் எனத் தனித்தனியாக ’டிசம்பர் 6’ தினம் வழக்கம்போல் அனுசரிக்கப்பட்டது. இதற்காக நடந்த இரண்டு கூட்டங்களில் அப்பல்கலைகழகத்தின் பேராசிரியர்கள் கலந்து கொண்டு கண்டனக் குரல் எழுப்பியிருந்தனர்.

இந்நிகழ்ச்சிகளில் ஒன்றுக்கு வளாகத்தில் ஒட்டப்பட்ட சுவரொட்டி சர்ச்சைக்கு உள்ளானது. அதில், ‘அயோத்தியில் இடிக்கப்பட்ட அதே இடத்தில் விரைவில் பாபர் மசூதி கட்டப்படும்’ எனப் படத்துடன் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த பல்கலைக்கழகத்தின் நிர்வாகப் பாதுகாவலர்கள் அந்த சுவரொட்டியை விரைந்து வந்து அகற்றினர். இப்பல்கலைகழகம் மத்திய அரசை சேர்ந்தது என்பதால் அதை எங்கும் ஒட்டக் கூடாது என மாணவர்களிடம் அறிவுறுத்தினர்.

இதனால், பல்கலைகழக மாணவர்கள் நிர்வாகத்தின் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இதே போன்ற சுவரொட்டிகளை இந்து தரப்பினர் ஒட்டும்போது முஸ்லிம்களுக்கு அந்த உரிமை இல்லையா? எனவும் கேள்வி எழுப்புகின்றனர்.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் அதன் மாணவர் பேரவையின் நிர்வாகக் குழு உறுப்பினரும் தமிழருமான கே.கவுதம் கூறும்போது, ‘இந்த மீதான மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இந்துத்துவாவினர் அதே இடத்தில் ராமர் கோயிலை கட்டுவோம் என கூட்டம் போட்டு பேசும்போது முஸ்லிம்கள் ஏன் செய்யக் கூடாது. இதன் மீது எங்கள் பேரவை கூடி ஆலோசிக்க உள்ளது.’ எனத் தெரிவித்தார்.

கடந்த அக்டோபரில் அன்றாடம் விசாரிக்கப்படும் என உத்தரவிடப்பட்ட வழக்கு, அடுத்த வருடம் ஜனவரிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இதனால், அதிருப்திக்கு உள்ளான இந்துத்துவாவினர், கோயிலை கட்ட அவசர சட்டம் இயற்ற மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x