Published : 05 Dec 2018 09:05 AM
Last Updated : 05 Dec 2018 09:05 AM
நாடாளுமன்றத்தில் மேகேதாட்டு விவகாரத்தை தமிழக எம்பிக்கள் எழுப்பினால் அதனை எதிர்க் கொள்வது குறித்து கர்நாடக மாநில அனைத்து கட்சி எம்பிக்களுடன் முதல்வர் குமாரசாமி நேற்று ஆலோசனை நடத்தினார்.
கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்ட அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், மேகேதாட்டு திட்ட வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டுள்ள நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி நேற்று பெங்களூருவில் அம்மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ், பாஜக, மஜத ஆகிய அனைத்துக்கட்சி எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நாடாளுமன்ற கூட்டத் தொடரில் தமிழக எம்பிக்கள் மேகேதாட்டு திட்டத்தை எதிர்த்தால், அதனை எவ்வாறு எதிர்கொள்வது, எத்தகைய பதிலை அளிப்பது, தமிழகத்தை எவ்வாறு சமாளிப்பது, மத்திய அமைச்சர்களுடன் எவ்வாறு இந்த விஷயத்தை கையாள்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
இதையடுத்து குமாரசாமி மேகேதாட்டு திட்டம் குறித்து விவாதிக்க நாளை (வியாழன்) அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதில் கர்நாட காவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்கள், எம்பிக்கள் உள்ளிட் டோரும் பங்கேற்க உள்ளனர். இதனிடையே கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் வரும் 7-ம் தேதி புதிய அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது குறித்து ஆய்வு செய்ய மேகேதாட்டு பகுதிக்கு செல்ல இருப்பதாக தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT