Last Updated : 31 Dec, 2018 03:00 PM

 

Published : 31 Dec 2018 03:00 PM
Last Updated : 31 Dec 2018 03:00 PM

பிரதமர் மோடி, உ.பி.முதல்வர் யோகி இருந்தும் ராமர் கோயில் கட்டப்படாதது அதிர்ச்சி அளிக்கிறது: உமா பாரதி

உ.பி.யின் முதல்வராக யோகி ஆதித்யநாத், நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி இருந்தும் ராமர் கோயில் கட்டப்படாதது மக்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக, பாஜகவின் மூத்த தலைவரான உமா பாரதி கூறியுள்ளார்.

இது குறித்து நேற்று போபாலில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி கூறும்போது, ''மத்தியிலும், மாநிலத்திலும் நம் ஆட்சி இருந்தும் ராமர் கோயில் கட்ட முடியாமல் இருப்பது பொதுமக்கள் இடையே ஏமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதற்காக, அவசரச் சட்டமோ, மசோதாவோ இயற்றி வழிகளைக் காண்பது அவசியம்'' எனத் தெரிவித்தார்.

ராமர் கோயிலின் பெயரால் வளர்ந்த பாஜகவிற்கு கடந்த 1984 மக்களவைத் தேர்தலில் வெறும் இரண்டு தொகுதிகள் கிடைத்தன. இது வளர்ந்து கோயில் பிரச்சனை சூடுபிடித்த போது 1989-ல் 84 என உயர்ந்து 2014 மக்களவைத் தேர்தலில் தனிமெஜாரிட்டியாக 284 இடங்கள் கிடைத்தன.

சமாதானப் பேச்சுவார்த்தை

இது குறித்து உமா பாரதி மேலும் கூறுகையில், ''பிரதமராக சந்திரசேகர், பிறகு வாஜ்பாய் இருந்தபோதும்  ராமர் கோயில் பிரச்சினையில் இருதரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். எனவே, தற்போதைய அரசும் பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும். அதற்கு அனைத்து தரப்பும் ஆதரவளிப்பார்கள்'' எனத் தெரிவித்துள்ளார்.

மூன்று மாநிலத் தோல்வியில் கருத்து

ராமர் கோயில் கட்டுவதில் தீவிர ஆர்வம் காட்டும் தலைவர்களில் ஒருவரான உமா பாரதி, ம.பி. மாநிலத்தின் முன்னாள் முதல்வராகவும் இருந்தவர். ம.பி. உள்ளிட்ட மூன்று மாநிலத் தேர்தல் குறித்தும் அவர் கருத்து கூறியுள்ளார்.

இது குறித்து அவர், 2003 சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவிற்கு கிடைத்த வெற்றி, 2004 மக்களவையில் கிடைக்கவில்லை. எனவே, சட்டப்பேரவையில் ஏற்பட்ட முடிவுகள் மக்களவைக்கும் நிகழும் என அவசியம் இல்லை என உமா பாரதி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x