Last Updated : 31 Dec, 2018 01:01 PM

 

Published : 31 Dec 2018 01:01 PM
Last Updated : 31 Dec 2018 01:01 PM

ஆறாவது விரல்களை தாய் வெட்டியதால் பச்சிளங் குழந்தை பரிதாப மரணம்

மத்தியப் பிரதேசத்தில் பிறந்த குழந்தையின் இரண்டு கை மற்றும் கால்களிலும் இருந்த ஆறாவது விரல்களை அதன் தாய் வெட்டியதால் அக்குழந்தை பலியாகி உள்ளது.  பெண் குழந்தைக்கு எதிர்காலத்தில் மணமாக அந்த விரல் தடையாக இருக்கும் என எழுந்த அச்சமே தாய் குழந்தையின் விரல்களை வெட்டக் காரணமாகி உள்ளது.

ம.பி. மாநிலம் கண்டுவா மாவட்டத்தில் சுந்தர்தேவ் கிராமத்தைச் சேர்ந்த தாராபாய் (22) என்பவருக்கு கடந்த டிசம்பர் 22-ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. இதன் இரண்டு கை மற்றும் இரண்டு கால்களிலும் ஆறாவதாகவும் ஒரு விரல் கூடுதலாக இருந்தன.

இதனால், தன் பெண் குழந்தை வளர்ந்து ஆளானால் அதற்கு மணமகன் கிடைக்காமல் போய் விடுவார் என அதன் தாய் அச்சம் அடைந்துள்ளார். இதனால், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரமாகப் பார்த்து கை, கால்களில் ஆறாவதாக உள்ள நான்கு விரல்களையும் வெட்ட முடிவு செய்துள்ளார் தாராபாய்.

வீட்டாருடனும் ஆலோசிக்காமல் தான் பெற்ற குழந்தையின் நான்கு விரல்களையும் நேற்று சமையல் கத்தியால் வெட்டியுள்ளார். பச்சிளங் குழந்தை என்பதால் அது சிறிய புண்ணாகி விரைந்து ஆறிப்போய் விடும் எனவும் அந்தத் தாய் நம்பியுள்ளார்.

விரல்கள் வெட்டப்பட்ட இடங்களில் பசுமாட்டின் சாணியை மருந்தாகப் பூசியுள்ளார். ஆனால், மயக்கம் அடைந்த குழந்தையை மருத்துவமனைக்கும் கொண்டு செல்லாததால், ஓரிரு மணி நேரங்களில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இது குறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்திடம் கண்டுவா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரான ருச்சி வரதன் மிஸ்ரா கூறும்போது, ''பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்தச் செயலுக்கு பில்லி சூனியம் மீதான நம்பிக்கையும் காரணமாக இருக்குமா என விசாரணை நடைபெறுகிறது'' எனத் தெரிவித்தார்.

சம்பவம் நடந்த சில மணிநேரங்களில் அக்குழந்தை கிராமத்தில் புதைக்கப்பட்டது. இதைக் கேள்விப்பட்டு வழக்குப் பதிவு செய்த கண்டுவா போலீஸார் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்து உடற்கூறு ஆய்விற்கு அனுப்பினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x