Published : 27 Aug 2014 09:21 AM
Last Updated : 27 Aug 2014 09:21 AM
பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சுதாகரன், இளவரசி தரப்பின் வழக்கறிஞர் அமித் தேசாய் தனது இறுதிவாதத்தை செவ்வாய்க் கிழமை நிறைவு செய்தார்.
இதனால் கடந்த 18 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூர் சிறப்புநீதிமன்றத்தில் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா முன்னிலையில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
வழக்கில் சுதாகரன் மற்றும் இளவரசியின் சார்பாக வழக்கறிஞர் அமித் தேசாய் 8-வது நாளாக தனது இறுதி வாதத்தை தொடர்ந்தார்.
அவர் வாதிட்டதாவது:
இவ்வழக்கில் குற்றம்சாட்டப் பட் டுள்ள சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய இருவரும் தங்களுடைய வரு மானத்துக்கு அதிகமான பணத்தை அவர்களுடைய 32 தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்தனர் என தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் குற்றப்பத்திரிக்கையில் தெரிவித்துள்ளனர்.இதற்காக வங்கியில் நடைபெற்ற பண பரிவர்த் தனைகளை ஆதாரமாக காட்டி யுள்ளனர்.
இது சட்டப்படி தவறானது. சுதாகரன் மற்றும் இளவரசி பெயரில் நடைபெற்றுள்ள பண பரிவர்த் தனைகள் சரியானதா, உண்மை யானதா, என்பது குறித்து சம்பந்தப் பட்ட வங்கிகளின் உயரதி காரிகளிடம் விசாரித்து சான்றிதழ் பெற வேண்டும்.அதன் பிறகே பண பரிவர்த்தனைகள் குறித்து வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
இவ்வழக்கில் இந்த நடை முறையை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பின்பற்றவில்லை.
ஆதாரம் இல்லை
1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது அதிகாரத்தை தவறாக பயன் படுத்தி சொத்து குவித்தார். அந்த பணத்தை சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் தங்களுடைய தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்தனர். இது தொடர்பாக ஜெய லலிதாவின் வீட்டில் வேலை செய்த ஜெயராமன், ராமஜெயம் ஆகியோர் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர் என அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இத்தகைய குற்றச்சாட்டை ஜெய லலிதாவின் வீட்டில் பணியாளர்களாக இருந்த ஜெயராமன், ராமஜெயம் ஆகியோரின் வாக்குமூலத்தின் மூலம் ஏற்க முடியாது.
ஏனென்றால் அவர்கள் எந்தெந்த தேதியில் எந்தெந்த தனியார் நிறுவ னங்களில் முதலீடு செய்தனர் என்பது குறித்த விவரங்கள் கூறப்பட வில்லை. இதற்காக அரசு தரப்பு வழக்கறிஞரும், தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரும் எந்த ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.
மேலும் ஜெயலலிதாவின் வரு மானம் 32 தனியார் நிறுவனங் களில் சசிகலா, சுதாகரன், இளவரசி மூலமாக முதலீடு செய்யப் பட்டது எனக்கூறி தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அவர்களை குற்றவாளிகளாக இவ்வழக்கில் இணைத்துள்ளனர்.அப்படியென்றால் ஏன் அந்த 32 தனியார் நிறுவனங்களையும், அதன் நிர்வாக இயக்குநர்களையும் வழக்கில் குற்றவாளியாக இணைக்கவில்லை?
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை
ஜெயலலிதாவை பழி வாங்க வேண்டும் என்ற காரணத்திற் காகவே,இவ்வழக்கில் துளியும் தொடர்பில்லாத சுதாகரன் மற்றும் இளவரசியை குற்றவாளிகளாக இணைத்துள்ளனர். எனவே அவர்கள் இருவரையும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்''எனக்கூறி தனது இறுதி வாதத்தை நிறைவு செய்தார்.
இன்று தொகுப்புரை
இதனைத் தொடர்ந்து பேசிய நீதிபதி டி'குன்ஹா,'இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நால்வர் தரப்பிலும் 42 நாட்கள் இறுதிவாதம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக நால்வர் தரப்பிலும் வழக்கு குறித்த தொகுப்புரையை முன்வைக்க வேண்டும். எனவே புதன்கிழமை அதனை முன் வைக்க தயாராக இருங்கள்''என்றார்.
அதற்கு ஜெயலலிதாவின் வழக் கறிஞர் பி.குமார்,'அரசு தரப்பு வழக்கறிஞர் பவானி சிங்கின் தொகுப்புரை முடிந்தவுடன், நாங்கள் வாதிடுகிறோம்'என அனுமதி கேட்டார்.அதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த அரசு வழக்கறிஞர் பவானி சிங், ‘‘சட்டப்படி அரசு தரப்பு வழக்கறிஞர் தான் இறுதியாக தொகுப்புரை வழங்க வேண்டும்.'' என்றார்.
அதனைத் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்ட நால்வர் தரப்பிலும் புதன்கிழமை இறுதி தொகுப்புரை வழங்குமாறு நீதிபதி டி'குன்ஹா தெரிவித்து, வழக்கை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT