Published : 19 Dec 2018 08:58 PM
Last Updated : 19 Dec 2018 08:58 PM
ஆளும் பாஜக மணிப்பூர் மாநில அரசையும் மத்திய அரசையும் விமர்சித்த காரணத்துக்காக இம்பால் பத்திரிகையாளர் கிஷோர்சந்திர வாங்கேம்ச்சா, தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 12 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டார்.
ஆளும் பாஜக மணிப்பூர் மாநில அரசையும், மத்திய அரசையும் விமர்சித்து இவர் வீடியோக்களை வெளியிட்டதற்காக நவம்பர் 27-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் மணிப்பூர் அரசின் உத்தரவில், பொது அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பங்கம் விளைவிப்பதான குற்றச்சாட்டில் இவர் மீது தேசியப் பாதுகாப்புச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
நவம்பர் 19ம் தேதி ஜான்சி ராணி லஷ்மிபாய் பிறந்ததினத்தை கொண்டாடியதை விமர்சித்து 39 வயது பத்திரிகையாலர் கிஷோர்சந்திர வாங்கேம்ச்சா வீடியோக்களை வெளியிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது, இவர் உள்ளூர் தொலைக்காட்சி சேனல் நிருபர் ஆவார்.
பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் அவரது பத்திரிகையாளர் பணி சம்பந்தப்பட்டதல்ல என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த தினத்தில் இவரால் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்கள் ஆங்கிலத்திலும் மெய்ட்டி மொழியிலும் இருந்தது, ஆனால் இது அவரது அன்றாடப் பணி நிமித்தமானதல்ல என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து டிச. 14ம் தேதி மாநில உள்துறை வெளியிட்ட அறிக்கையில், டிசம்பர் 11ம் தேதி தேசியப் பாதுகாப்புச் சட்ட ஆலோசனைக் குழு பத்திரிகையாளர் மீதான குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்தது என்று தெரிவித்துள்ளது.
டிசம்பர் 13ம் தேதியன்று பத்திரிகையாளர் மீதான குற்றச்சாட்டுகளுக்குப் போதிய ஆதாரம் இருப்பதாக ஆலோசனைக் குழு முடிவுகட்டியது. ஆகவே அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சிறைப்பிடிக்கலாம் என்று பரிந்துரை மேற்கொண்டது.
கைதுக்கு கவர்னர் ஒப்புதல்:
தேசியப் பாதுகாப்புச் சட்ட ஆலோசனைக் குழுவின் பரிந்துரையை ஏற்ற மணிப்பூர் கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதி அளித்தார்.
மணிப்பூர் அரசுக்கும் ஜான்சிராணிக்கும் என்ன தொடர்பு? ஜான்சி ராணி பிறந்த தினத்தை மத்திய அரசின் பேச்சைக் கேட்டு மணிப்பூர் அரசு கொண்டாடுகிறது. முதல்வர் பைரன்சிங் ‘மத்திய அரசின் பொம்மை’ என்றும் ஹிந்துத்துவாவின் பொம்மை என்றும் அந்த வீடியோவில் பத்திரிகையாளர் சாடியதாகப் புகார் எழுந்தது.
தற்போடு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் 12 மாத சிறைத் தண்டனையை அடுத்து பத்திரிகையாளர் வாங்கேம்ச்சாவின் மனைவி ரஞ்சிதா இலங்பம் மத்திய அரசிடம் முறையிட்டுள்ளார். ஆனால் இன்னும் எந்த ஒரு பதிலும் கிடைக்கவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT