Last Updated : 13 Nov, 2018 09:24 AM

 

Published : 13 Nov 2018 09:24 AM
Last Updated : 13 Nov 2018 09:24 AM

2 மணி நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்த விவகாரம்: வடமாநிலங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு; வழக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர் சுபாஷ் தத் தகவல்

தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பதால் டெல்லியில் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும் அதற்கு தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் 3 பேர் வழக்கு தொடுத்திருந்தனர். இதே பிரச்சினை நாடு முழுவதற்கும் ஏற்படுவதால் பட்டாசு வெடிக்க மட்டுமல்லாது அதன் உற்பத்தி, விற்பனைக்கும் தடை விதிக்கக் கோரி சுற்றுச்சூழல் ஆர்வலர் சுபாஷ் தத்துவும் ஒரு வழக்கு தொடுத்து இருந்தார்.

இந்த 4 மனுக்களையும் ஒன்றாக சேர்த்து விசாரித்த உச்ச நீதிமன்றம், தீபாவளி பண்டிகையன்று 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்து தீர்ப்பு வழங்கியது. ஆனால் இந்த உத்தரவு டெல்லியைத் தவிர, உத்தரபிரதேசம், ராஜஸ்தான் பிஹார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் பஞ்சாப் ஆகிய வட மாநிலங்களில் முறையாகப் பின்பற்றப்படவில்லை.

குறிப்பாக, நேரக் கட்டுப்பாட்டை மீறி டெல்லி தவிர வட மாநிலங்களில் பட்டாசு வெடித்தனர். ஆனால் இது தொடர்பாக ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்பட்டதாகத் தெரியவில்லை என்று ‘இந்து தமிழ்’ நாளிதழில் செய்தி வெளியாகி இருந்தது. இதன் அடிப்படையில் மேலும் சில கூடுதல் தகவல்களைத் திரட்டி வட மாநிலங்கள் மீது உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடுக்க சுபாஷ் தத் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து சுபாஷ் தத்துவின் வழக்கறிஞர் மனோஜ் செல்வராஜ் ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் கூறும்போது, “உச்ச நீதிமன்ற உத்தரவு வட மாநிலங்களில் காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதாக ‘இந்து தமிழ்’ நாளிதழ் வெளியிட்ட செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இந்த செய்தியின் அடிப்படையில் அதிகாரப்பூர்வ தகவல்களைத் திரட்ட தொடங்கி உள்ளோம். குறிப்பாக, தீபாவளி நாளில் நாடு முழுவதும் காற்று மாசு எந்த அளவில் இருந்தது என்பது குறித்த தகவலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் கேட்டுள்ளோம். இதுபோல மேலும் சில ஆதாரங்கள் கிடைத்ததும் அதன் அடிப்படையில் விரைவில் அவமதிப்பு வழக்கு தொடுக்க உள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x