Published : 22 Nov 2018 12:15 PM
Last Updated : 22 Nov 2018 12:15 PM

பம்பையில் மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்ட பொன். ராதாகிருஷ்ணனின் கான்வாய்; மன்னிப்பு கேட்ட கேரள காவல்துறை

சபரிமலையில் தரிசனம் முடித்துத் திரும்பிய மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனின் கான்வாயை வியாழக்கிழமை அதிகாலையில் பம்பையில் கேரள காவல்துறை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போராட்டக்காரர்களின் வாகனம் என்று நினைத்ததால் தவறுதலாக வாகனத்தை நிறுத்திவிட்டோம் என்று விளக்கம் தெரிவித்த கேரள காவல்துறை, எழுத்துபூர்வமாக மன்னிப்பு கோரியது.

சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு கேரள மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக இந்து அமைப்புகள், பாஜக, காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சபரிமலை மகரவிளக்கு சீசன் தொடங்கிவிட்டதால், பக்தர்கள் சபரிமலைக்கு வந்து செல்ல கடும் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் போலீஸார் விதித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் பெய்த மழையால், பம்பையில் வாகனங்களை நிறுத்தும் இடம் அடித்துச் செல்லப்பட்டு விட்டதால், அதற்குப் பதிலாக அடிவாரப் பகுதியான நிலக்கலில் வாகனங்கள் அனைத்தையும் நிறுத்தக் கூறியுள்ளனர்.

அதன்பின் பக்தர்கள் அனைவரும் தங்களின் சொந்த வாகனத்தில் செல்ல முடியாது. கேரள அரசுப் பேருந்தில்தான் செல்ல முடியும். இந்நிலையில், மத்திய கப்பல் மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் சபரிமலைக்கு விரதம் இருந்து இருமுடிகட்டி  சபரிமலைக்குப் புறப்பட்டார். அமைச்சரின் அதிகாரபூர்வ வாகனம் சபரிமலை சன்னிதானத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள நிலக்கல் பகுதி வந்தவுடன் அதற்கு மேல் செல்ல போலீஸார் அனுமதி மறுத்துவிட்டனர். அதன்பின் இருமுடியுடன், கேரள அரசுப் பேருந்தில் தன்னுடன் வந்தவர்களுடன் பம்பைக்குப் பயணித்தார்.

அதைத் தொடர்ந்து சபரிமலையில் தரிசனம் முடித்த ராதாகிருஷ்ணன் கீழே இறங்கத் தொடங்கினார். நள்ளிரவு 1 மணி அளவில் கேஎஸ்ஆர்டிசி பேருந்து நிலையம் அருகே அவரின் கான்வாய் செல்லும்போது கேரள காவல்துறையினர், கார்களில் ஒன்றை மறித்தனர்.

காரில் இருந்தவர்கள் பொன்.ராதாகிருஷ்ணனை போனில் அழைத்து விவரத்தைத் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து அவர் சம்பவ இடத்துக்கு வந்தார். தாங்கள் வழிமறித்தது மத்திய அமைச்சரின் கார் என்பதை அறிந்த கேரள காவல்துறையினர்,  போராட்டக்காரர்களின் வாகனம் என்று நினைத்ததால் தவறுதலாக வாகனத்தை நிறுத்திவிட்டதாக விளக்கம் அளித்தனர். அத்துடன் எழுத்துபூர்வமான மன்னிப்புக் கடிதத்தையும் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x