Published : 10 Nov 2018 04:51 PM
Last Updated : 10 Nov 2018 04:51 PM

அமலாக்கத் துறைக்கு லஞ்சம்- முன்னாள் பாஜக அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பெங்களூருவில் சரண்

அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு ரூ. 20 கோடி லஞ்சம் கொடுப்பதாக கூறி, நிதி மோசடியில் ஈடுபட்ட கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி பெங்களூருவில் உள்ள கிரைம் பிராஞ்ச் அலுவலகத்தில் சரணடைந்தார்.

சையத் அகமது ஃப்ரீத் என்பவர் ஆம்பிடெண்ட் என்ற நிதி நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி ரூ. 600 கோடி வரை மோசடி செய்துள்ளதாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் சையத் அகமது ஃப்ரீதை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தியபோது, கர்நாடக பாஜக‌ முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான‌ ஜனார்த்தன ரெட்டி அவருடன் சேர்ந்து நிதி மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

அதாவது ஜனார்த்தன ரெட்டி தனக்கு மத்திய அரசுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் சையத் அகமது ஃப்ரீத் மீதான வழக்குகளைச் சாதகமாக்க முடியும், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக சையத் அகமது ஃப்ரீத்திடம் ரூ. 21 கோடி பெற்றுள்ளார். அதில் ரூ.3 கோடி ரொக்கமாகவும், ரூ.18 கோடி மதிப்புள்ள 57 கிலோ தங்கத்தையும் பெற்றதாக போலீஸாரிடம் சையத் அகமது ஃப்ரீத் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து குற்றப்பிரிவு போலீஸார் ஜனார்த்தன ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவான அவரைக் கைது செய்யத் துணை ஆணையர் மஞ்சுநாத் சவுத்ரி தலைமையில் 4 படைகள் அமைத்து பெங்களூரு, பெல்லாரி, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டி பெங்களூருவில் உள்ள கிரைம் பிராஞ்ச் அலுவலகத்தில் இன்று (சனிக்கிழமை) சரணடைந்தார். ஏற்கெனவே சுரங்க முறைகேடு வழக்கில் சிக்கி, ஜாமீனில் வெளியே வந்துள்ள ஜனார்த்தன ரெட்டி மீண்டும் சர்ச்சைகளில் சிக்கியுள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x