Published : 02 Nov 2018 01:53 PM
Last Updated : 02 Nov 2018 01:53 PM

‘‘ரபேல் ஊழலில் ரூ.284 கோடி கமிஷன் பெற்ற அனில் அம்பானி; தூக்கமின்றி தவிக்கும் பிரதமர் மோடி’’ - ராகுல் காந்தி

ரபேல் ஊழல் விவகாரத்தில் அனில் அம்பானியின் நிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனம் முதல்கட்டமாக 284 கோடி ரூபாயை லஞ்ச தொகையை கமிஷனாக பெற்றுள்ளது, இந்த விவகாரத்தில் விசாரணை நடைபெறுமோ என்ற அச்சத்தில் பிரதமர் மோடி இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்து வருகிறார் என என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

பிரான்ஸின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆனால், முந்தைய காங்கிரஸ் அரசு நிர்ணயித்த விலையைக்காட்டிலும் பல மடங்கு விலையை அதிகமாக பாஜக அரசு வழங்க உள்ளது என்றும், மத்திய அரசின் ஹெச்ஏஎல் நிறுவனத்துக்கு வழங்க இருந்த ஒப்பந்தத்தை ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்ததாக புகார் எழுந்துள்ளது.

இதில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது

‘‘ரபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி ஊழல் செய்துள்ளதற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன. டசால்ட் ஏவியேஷன் நிறுவன தலைமை செயல் அதிகாரி வெளியிட்டுள்ள தகவலின்படி, நிலத்துக்காக அந்த தொகை தரப்பட்டதாக கூறியுள்ளார்.

ஆனால் டசால்ட் நிறுவனம் லஞ்சமாக அளித்த 284 கோடி ரூபாய் தொகையை வைத்து தான் அனில் அம்பானி அந்த நிலத்தை வாங்கியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. நஷ்டத்தில் இயங்கும் ஒரு நிறுனவத்துக்கு டசாலட் நிறுவனம் 284 கோடி ரூபாய் தர வேண்டிய காரணம் என்ன? எனவே டசால்ட் நிறுவன அதிகாரி பொய் சொல்கிறார்.

இந்த ஒப்பந்தமே பிரதமர் மோடி, அனில் அம்பானி என்ற இருநபர்களுக்கிடையே செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி நேரடியாக தலையிட்டு இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளார். பாதுகாப்புத்துறை அமைச்சரான மனோகர் பாரீக்கர் இதில் தலையிடவில்லை. பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்தபிறகு பாரீக்கர் இந்த விவகாரங்களில் இருந்து ஒதுங்கிக் கொண்டார்.

நாடாளுன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட்டால் முழு உண்மையும் வெளியே வரும். இந்த விவகாரம் தெரிந்ததால் தான் சிபிஐ இயக்குனர் நீக்கப்பட்டார். ரபேல் விவகாரத்தில் விசாரணை நடைபெறுமோ என்ற அச்சத்தில் இரவு முழுவதும் தூங்காமல் பிரதமர் மோடி தவித்து வருகிறார்’’ என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x