Published : 26 Nov 2018 04:59 PM
Last Updated : 26 Nov 2018 04:59 PM
கேரளாவில் பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்த புகாரில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பி.கே. சசியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து 6 மாதம் சஸ்பெண்ட் செய்து அம்மாநில கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.
கேரள மாநிலம் ஷொர்னூர் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்எல்ஏ பி.கே. சசி. பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் மாநில கட்சி தலைமையிடம் புகார் கூறினார்.
ஆனால் இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியிடம் புகார் அளித்தாக கூறப்படுகிறது. இதையடுத்து புகார் குறித்து விசாரிக்க இருநபர் குழுவை கட்சித் தலைமை நியமித்தது.
ஆனால் இந்த புகாரை எம்எல்ஏ பி.கே. சசி மறுத்து வந்தார். இதனை தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்க முன் வந்தது. ஆனால் புகார் அளித்த பெண் ஒத்துழைப்பு அளிக்கவில்லை. ஆளும் கட்சி எம்எல்ஏவை காப்பாற்ற கேரள அரசு முயலுவதாக காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகள் புகார் தெரிவித்தன.
இந்த நிலையில எம்எல்ஏ பி.கே. சசி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஆறு மாதகாலம் கட்சியில் இருந்து நீக்கி வைக்கப்படுவதாக மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் ‘‘எம்எல்ஏ பி.கே.சசி தான் வகிக்கும் பதவிக்கு இழுக்கு ஏற்படும் வகையில் பெண் ஒருவரிடம் பேசியதாக வந்த புகாரின் கீழ் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT