Published : 30 Nov 2018 12:29 PM
Last Updated : 30 Nov 2018 12:29 PM
வேளாண் கடன் தள்ளுபடி, உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணி இன்று தொடங்கி நடந்து வருகிறது. பாதுகாப்புப் பணியில் 3,500 போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வேளாண் கடன் தள்ளுபடி , விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு உரிய விலை, விவசாயிகளுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 10-ம் தேதி விவசாயிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அந்த ஆர்ப்பாட்டத்தின் போது எந்தவிதமான முடிவும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து, நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டத்தைக் கூட்டி, தங்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணி செல்லத் திட்டமிட்டனர்.
ஆயிரக்கணக்கான விவசாயிகள்
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நவம்பர் 30-ம் தேதி நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி செல்லப்போவதாக அனைத்து இந்திய விவசாயிகள் ஒத்துழைப்பு குழு, சங்கம் ஆகியவை அறிவித்திருந்தன. இந்தக் குழுவில் 207 அமைப்புகள் அங்கம் வகிக்கின்றன.
இதற்காக, குஜராத், ஆந்திரப் பிரதேசம், தமிழகம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் நேற்று டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கூடினார்கள். தமிழகத்தில் இருந்து தேசிய தென்னிந்திய நிதிகள் ஒருங்கிணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பி.அய்யாகண்ணு தலைமையில் ஆயிரயத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பேரணியில் பங்கேற்கின்றனர்.
3500 போலீஸார் பாதுகாப்பு
ராம்லீலா மைதானத்தில் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் பேரணியாக நாடாளுமன்றத்தை நோக்கி இன்று காலை புறப்பட்டனர். பேரணியில் அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் தவிர்க்க, பேரணி செல்லும் பாதையில் 3,500 போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லியின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ துணை ஆணையர்கள் 850 பேர் மத்திய டெல்லியில் இருந்து வந்துள்ளனர். 12 போலீஸ் கம்பெனிகள், 2 பெண்கள் போலீஸ் பட்டாலியன்கள், வெளமாவட்டங்களில் இருந்து 600 போலீஸார், 71 அதிகாரிகள் கொண்ட 9 போலீஸ் கம்பெனிகள் என 3,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
போக்குவரத்து நெரிசல்
விவசாயிகள் பேரணி தொடங்கியதைத் தொடர்ந்து டெல்லியில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கஸ்தூரிபா காந்தி சாலை, பெரோஷா சாலை, ஜன்பந்த், மந்திர் மார்க், பஞ்ச்குயன் சாலை, அசோகா சாலை, ஜெய் சங் மார்க், கன்னாட் பேலஸ், ஆகியோ பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் குறித்து மக்களுக்கு பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப் மூலம் அவ்வப்போது டெல்லி போக்குவரத்து போலீஸார் தொடர்ந்து தகவல் அளித்து வருகின்றனர்.
ஆதரவு
விவசாயிகள் நடத்தும் இந்தப் பேரணிக்கு டெல்லி மண்டலத்தில் உள்ள 5 சீக்கிய குருதுவாராக்கள் ஆதரவு அளித்துள்ளனர். மேலும், பல்கலைக்கழக மாணவர்கள், கல்லூரி மாணவர்களும் ஆதரவு அளித்துள்ளனர். மேலும் தன்னார்வலர்கள், வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள் என ஏராளமானோர் விவசாயிகள் பேரணியில் பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும், விவசாயிகளுக்கான தேசம் என்ற பதாகைகளை ஏந்தி, 700-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் பேரணியில் செல்கின்றனர்.
இதனால் டெல்லி நகர் முழுவதும் விவசாயிகளின் சிவப்பு நிறக்கொடியும், மஞ்சள் நிறக்கொடியுமாக காட்சி அளிக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT