Published : 16 Nov 2018 11:55 AM
Last Updated : 16 Nov 2018 11:55 AM

சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு எதிராக அநீதி இழைக்கப்பட்டுள்ளது: சுப்பிரமணியன் சுவாமி வருத்தம்

ஊழல் புகார் காரணமாக கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட சிபிஐ இயக்குநர் அலோக் வர்மாவுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

ஊழல் புகார் காரணமாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா, ராகேஷ் அஸ்தானா ஆகியோரை நீக்க மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். இதைத் தொடர்ந்து இணை இயக்குநர் எம். நாகேஸ்வர் ராவ் இடைக்கால இயக்குநராகப் பொறுப்பேற்றார்.

தன்னிச்சை அமைப்பான சிபிஐயில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து விளக்கம் அளித்த சிபிஐ, ''சிபிஐ அமைப்பின் இயக்குநர் பதவியில் அலோக் வர்மா தொடர்கிறார். சிறப்பு இயக்குநர் பதவியில் ராகேஷ் அஸ்தானா தொடர்கிறார். மத்திய ஊழல் கண்காணிப்பு அமைப்பு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் அவர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர்'' என்று தெரிவித்திருந்தது.

தன்னைக் கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியதை எதிர்த்து இயக்குநர் அலோக் வர்மா உச்ச நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றம் அலோக் வர்மாவின் வழக்கை விசாரித்து வருகிறது.

இந்நிலையில் சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா குறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, ''அலோக் வர்மா டெல்லி காவல்துறை ஆணையராக இருந்தபோதே அவரைத் தெரியும். அவர் ஏர்செல் மேக்சிஸ் மற்றும் பிற வழக்குகளில் சிபிஐ சார்பாகப் பணிபுரிந்ததைப் பார்த்திருக்கிறேன். அவர் ஒரு நேர்மையான மனிதர்.

அவருக்கு எதிராக ஏராளமான அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. ஊழலுக்கு எதிரான நமது பிரச்சாரத்தை இது காயப்படுத்துகிறது. உச்ச நீதிமன்றம் அவருக்கு நியாயம் வழங்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x