Published : 10 Nov 2018 02:25 PM
Last Updated : 10 Nov 2018 02:25 PM

நக்சல்களின் பிடியில் இருந்து சத்தீஸ்கர் விடுவிக்கப்பட்டு விட்டது: அமித் ஷா பேச்சு

மாவோயிசம் புரட்சி என நினைப்பவர்களின் செயல் சத்தீஸ்கரில் எடுபடாது, நக்சல்களின் பிடியில் இருந்து இந்த மாநிலத்தை ஏறக்குறைய பாஜக அரசு விடுவித்துள்ளது என அக்கட்சித் தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.

சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. மாநிலத்தின தெற்கு பிராந்தியத்தில் உள்ள 18 தொகுதிகளுக்கு நவம்பர் 12 அன்றும் மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 20 அன்றும் தேர்தல்கள் நடைபெறுகின்றன.

இரு கட்டங்களிலும் நடைபெறும் தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11 அன்று எண்ணப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சித் தலைவர்களும் அங்கு தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் அங்கு நேற்று பிரசாரம் செய்தனர்.

பாஜக தலைவர் அமித் ஷா இன்று சத்தீஸ்கரில் வாக்கு சேகரித்து வருகிறார். முன்னதாக ராய்ப்பூரில் கட்சியின் தேர்தல் அறிக்கையை அவர் வெளியிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முதல்வர் ரமண் சிங் தலைமையிலான பாஜக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. 3 லட்சத்து 48 ஆயிரம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 7 லட்சம் ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளது. உயர்கல்வி, கிராமப்புற மின்சாரம் என பல திட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. சிறிய மாநிலமான சத்தீஸ்கருக்கு பிரதமர் மோடி முன்னுரிமை கொடுத்து வருகிறார். மத்திய அரசு 3 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியுள்ளது.

நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று பாஜக நான்காவது முறையாக இங்கு ஆட்சி அமைக்கும். நக்சல்களின் பிடியில் சிக்கி தவித்த சத்தீஸ்கரை பாஜக அரசு விடுவித்துள்ளது. மாவோயிசத்தை ஆதரிப்பவர்களை சத்தீஸ்கர் மக்கள் புறக்கணிப்பார்கள். தற்போது அதிகஅளவு சிமெண்ட் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலமாக சத்தீஸ்கர் உருவெடுத்துள்ளது’’ என அமித் ஷா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x