Last Updated : 03 Nov, 2018 03:49 PM

 

Published : 03 Nov 2018 03:49 PM
Last Updated : 03 Nov 2018 03:49 PM

கிராமமே மயான அமைதி: வன்முறை அச்சத்தால் வெளியேறிய மக்கள்; உ.பி.யில் தொடரும் துர்கா பூஜை கலவரம்

துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தில் ஏற்பட்ட பிரச்சினை மோதலாகி கலவரமாக வெடித்ததால் உத்தரப் பிரதேச கிராமம் ஒன்று வன்முறைக் களமானது. இதனால் பெரும்பாலான உள்ளூர் மக்கள் தப்பியோடிய நிலையில் கிராமமே மயான அமைதியாக காட்சியளிக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலம் பாஹ்ராய்ச் மாவட்டத்தில்தான் காய்ரா பஜார் என்ற கிராமம் உள்ளது. இங்கு கடந்த அக்டோபர் 21 அன்று, துர்கா சிலை கரைப்பதற்காக கிராமத்தின் பிரதான சாலைவழியே ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மோதல் ஏற்பட்டது.

இதில் மக்கள் இருவேறு சமூகங்களாகப் பிரிந்து கலவரத்தில் இறங்கினர். இதனால் அவ்வூரின் தெருக்கள் எங்கும் வன்முறை வெடித்தது. கடைகள் சூறையாடப்பட்டன, வீடுகளுக்கு தீ வைத்தனர், ஆயுதங்களால் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டு ரத்தம் சிந்தினர். இதில் பலர் இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கிராமத்தில் எஞ்சியிருந்த சிலரில் ஒரு பெண் இதுகுறித்து தெரிவிக்கையில்,

''இங்கே நிலைமை மிகவும் தீவிரமாகியுள்ளது. பெரும்பாலான மக்கள் பயத்தினால் தங்கள் வீடுகளை காலிசெய்துகொண்டு ஊரைவிட்டு வெளியேறினர். என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியவில்லை, காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் நிறைய பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையிலும், இன்னும் ஆங்கங்கே ''வெட்டுவேன் குத்துவேன்'' என்ற சத்தம் மட்டும் வந்துகொண்டேயிருக்கிறது'' என்றார்.

எப்படியாயினும் ஊருக்குள் தற்போது போலீஸ் நுழைந்துவிட்டது. சூழ்நிலையை அவர்கள், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்நிலையில் வெளியேறிய மக்கள் இனி பயமின்றி ஊருக்குள் திரும்பலாம். ஆனால் மக்கள் ஊருக்குள் திரும்பாமல் தொடர்ந்து அச்சத்தில் உள்ளனர் என்பதுதான் உண்மை.

இதுகுறித்து உதவி காவல்கண்காணிப்பாளர் ரவீந்திர சிங், ஏஎன்ஐயிடம் தெரிவிக்கையில்,

''இரு சமூகத்தைச் சேர்ந்தவர்களில் சிலரை கைது செய்துள்ளோம். எந்தவொரு பயமும் இன்றி மக்கள் இப்போது கிராமத்திற்குள் திரும்ப முடியும். இந்த விஷயத்தில் முழுமையான விசாரணை நடைபெற்று வருகிறது, இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தின் வீடியோ காட்சிகள் கிடைத்தன, வன்முறைத் தாக்குதல்களை அவை உறுதிப்படுத்தியுள்ளன.''

இவ்வாறு ரவீந்திர சிங் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x