Last Updated : 01 Nov, 2018 03:48 PM

 

Published : 01 Nov 2018 03:48 PM
Last Updated : 01 Nov 2018 03:48 PM

‘படேலைப் போல், மகாத்மா காந்திக்கு ஏன் மிகப்பெரிய சிலையை பாஜக எழுப்பவில்லை?’: சசி தரூர் கேள்வி

சர்தார் வல்லபாய் படேலுக்கு உலகிலேயே மிகப்பெரிய சிலை எழுப்பிய பாஜகவினர், ஏன் தேசப்பிதா மகாத்மா காந்திக்கு சிலை எழுப்பவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

திருவனந்தபுர மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கூட்டம் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் பங்கேற்றார். அப்போது, குஜராத்தில் சாதுபேட்டில் சர்தார் சரோவர் அணை அருகே சர்தார் படேலுக்கு 182 மீட்டர் உயரமுள்ள உலகிலேயே மிகப்பெரிய சிலையை மத்திய அரசு சார்பில் அமைத்துள்ளது. இது குறித்து சசிதரூர் கேள்வி எழுப்பினார். அவர் பேசியதாவது:

சர்தார் வல்லபாய் படேலுக்கு அமைக்கப்பட்ட மிகப்பெரிய சிலை போன்று, நாட்டில் மகாத்மா காந்திக்கு மிகப்பெரிய சிலை இல்லையே. நாடாளுமன்றத்தில் காந்திக்கு சிலை இருக்கிறது. ஆனால், 182 மீட்டர் உயரமுள்ள சிலை காந்தியின் சீடருக்கு இருக்கிறது காந்திக்கு இல்லை. மகாத்மா காந்தியின் சீடருக்கு நாட்டில் மிகப்பெரியசிலை இருக்கிறது. ஆனால், சீடரின் குருவான மகாத்மா காந்திக்கு ஏன் நாட்டில் மிகப்பெரிய சிலை இல்லை.

சர்தார் படேல் மிகவும் எளிமையான மனிதர். காந்திஜியின் சீடர் என்று அனைவராலும் அறியப்பட்டவர். நான் ஒரு கேள்வி கேட்கிறேன். காந்தியக் கொள்கை மீது நம்பிக்கையுடைய, எளிமையான மனிதர் என்று சொல்லக்கூடியவரும், ஏழைகள் மீது மிகவும் கரிசனம் கொண்ட சர்தார் படேலுக்கு இவ்வளவு உயரமாகச் சிலையை எழுப்பியது சரிதானா?

மகாத்மா காந்திக்கு ஏன் பாஜகவினர் மிகப்பெரிய சிலையை அமைக்கவில்லை என்ற என்னுடைய கேள்விக்கு பாஜகவிடம் எந்தவிதமான பதிலும் இல்லை.

காரணம் என்னவென்றால், மகாத்மா காந்தியின் கொள்கைகள் அனைத்தும் அஹிம்சையை போதிப்பதாகும். ஆனால், பாஜகவுக்கு அஹிம்சையின் மீதும், காந்தியின் கொள்கைகள் மீதும் நம்பிக்கை இல்லை.

சர்தார் படேல் போன்ற சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வரலாறுகளை தங்கள் பக்கம் கடத்திக்கொண்டு செல்ல பாஜகவினர் முயற்சிக்கிறார்கள். ஆனால், பாஜகவின் உண்மையான வரலாற்றில், சுயவரலாற்றில் சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஒருவரும் இல்லை. சர்தார் படேலைப் பொறுத்தவரை அவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். சர்தார்படேலை சொந்தம் கொண்டாட, அவரை பாஜகவினர் அபகரிக்கவிடக்கூடாது.

மகாத்மா காந்தியுடன் இணைந்து செயலாற்றிய சர்தார் படேல், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தினார். அவரை நாங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்

இவ்வாறு சசி தரூர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x