Published : 10 Nov 2018 11:31 AM
Last Updated : 10 Nov 2018 11:31 AM
வனத்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட புலி ஆவ்னி மற்றும் 10 மாதங்களே ஆன அதன் இரு குட்டிகளுக்கு நீதி கேட்டு ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் மாலை 4 மணி அளவில் பேரணி நடக்க உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் யவாடாமால் மாவட்டத்தில் உள்ள பந்தர்காவாடா வனப்பகுதியில் ஆட்கொல்லியாக மாறிய பெண் புலி ஆவ்னி சுட்டுக்கொல்லப்பட்டது. தாய் புலி ஆட்கொல்லியாக மாறியதால் மனித மாமிசத்தை தனது குட்டிகளுக்கும் கொடுத்திருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. இதனால் தாயையும், இரண்டு குட்டிகளையும் கொல்ல வனத்துறை முடிவு செய்தது. ஆனால் இதற்கு உயிரின ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
#SaveAvni #LetAvniLive என்ற ஹேஷ்டேகுகள் மூலம் விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் சமூக வலைதளங்களில் நடந்தன. புலிக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
சுமார் 3 மாதங்கள் ட்ரோன் மற்றும் நவீன கருவிகளுடன் வனப்பகுதியில் முகாமிட்டு இருந்த வனத்துறையினர் ஆவ்னி புலியைச் சுட்டுக்கொன்றனர். இதைத் தொடர்ந்து வேட்டைக்காரரை வைத்து, சட்ட விதிகளை மீறி புலி சுட்டுக் கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் புலி ஆவ்னி மற்றும் 10 மாதங்களே ஆன அதன் இரு குட்டிகளுக்கு நீதி கேட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) உலகம் முழுவதும் மாலை 4 மணி அளவில் பேரணி நடக்க உள்ளது.
இதில் திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் விலங்குகள் உரிமை ஆர்வலர்கள் ஆகியோர் பங்குகொள்கின்றனர். இந்தியா முழுக்க 22 நகரங்களிலும் உலகம் முழுவதும் 11 நாடுகளிலும் பேரணி நடைபெறுகிறது.
இதுகுறித்து பேரணிக்கு ஏற்பாடு செய்த நபர்களில் ஒருவரான நடிகை ரூபாலி கங்குலி கூறும்போது, ''விலங்குகளால் பணம் கொடுத்து வழக்கறிஞர்களை வைத்து வாதாட முடியாது. குரலற்றவர்களின் குரலாக மக்களே இருக்க வேண்டும். வருங்காலத்தில் என் மகன் பெரியவனாகி புலியை சிலைகளில் மட்டுமே பார்க்கும் அவலம் ஏற்பட்டுவிடக் கூடாது.
எங்களுடைய போராட்டத்தின் முதல் கோரிக்கை புலியின் இரண்டு குட்டிகளுக்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். இரண்டாவதாக வனங்களை கான்க்ரீட் கட்டிடங்களாக மாற்றுவதைத் தடுக்க வேண்டும். மூன்றாவதாகத் தொழிலதிபர்களுக்குக் காட்டைத் தாரை வார்க்கும் மகாராஷ்டிர வனத்துறை அமைச்சர் முங்கனித்வார் ராஜினாமா செய்ய வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT