Last Updated : 11 Nov, 2018 08:33 AM

 

Published : 11 Nov 2018 08:33 AM
Last Updated : 11 Nov 2018 08:33 AM

நிதி மோசடி வழக்கு; ஜனார்த்தன ரெட்டி சரண்: வழக்கை சந்திக்க போவதாக பேட்டி

நிதி மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான‌ ஜனார்தன ரெட்டி நேற்று மாலை பெங்களூரு போலீஸாரிடம் சரணடைந்தார்.

பெங்களூருவை சேர்ந்த சையத் அகமது ஃப்ரீத் என்பவர் ‘ஆம்பிடெண்ட்’ என்ற நிதி நிறுவனம் மூலம் மக்களிடம் ரூ. 600 கோடி மோசடி செய்ததாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்து சையத் அகமது ஃப்ரீதை கைது செய்து விசாரித்தபோது, கர்நாடக பாஜக‌ முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான‌ ஜனார்த்தன ரெட்டி அவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

ஜனார்த்தன ரெட்டி தனக்கு மத்திய அரசுடன் நெருங்கிய தொடர்பு இருப்பதால் சையத் அகமது ஃப்ரீத் மீதான வழக்குகளை அவருக்கு சாதகமாக முடித்து தருவதாககூறியுள்ளார். மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுப்பதற்காக சையத் அகமது ஃப்ரீத்திடம் ரூ. 21 கோடி பெற்றுள்ளார்.

அதில் ரூ.3 கோடி ரொக்கமாகவும், ரூ. 18 கோடியை 57 கிலோ எடை கொண்ட தங்கமாகவும் பெற்றதாக சையத் அகமது ஃபரீத் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, குற்றப்பிரிவு போலீஸார் ஜனார்த்தன ரெட்டி மீது வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வந்தனர். துணை ஆணையர் மஞ்சுநாத் சவுத்ரி தலைமையிலான 4 படைகள் அமைத்து பெங்களூரு, பெல்லாரி, டெல்லி, ஹைதராபாத் ஆகிய இடங்களில் போலீஸார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். இதனிடையே, ஜனார்த்தன ரெட்டி ஜாமீன் கோரி கடந்த 7-ம் தேதி ஹைதராபாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இவ்வழக்கு விசாரணைக்கு வராத நிலையில், நேற்று பெங்களூரு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜனார்த்தன ரெட்டி ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜனார்த்தன ரெட்டி தனது வழக்கறிஞருடன் நேற்று மாலை பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் முன்னிலையில் ஆஜரானார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் ஜ‌னார்த்தன ரெட்டி, கூறியதாவது:இவ்வழக்கில் நான் தலைமறைவாக இருக்கவில்லை. ஊடகங்களில் நான் ஹைதராபாத்தில் ஒளிந்து கொண்டிருப்பதாக வந்த செய்தி தவறானது. பெங்களூருவில்தான் 4 நாட்களாக இருந்தேன். குற்றப்பிரிவு போலீஸார் அனுப்பிய நோட்டீஸ் இன்று (சனிக்கிழமை) காலையே எனக்கு கிடைத்தது.

எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் என் மீது இவ்வழக்கு புனையப்பட்டிருக்கிறது. முதல் தகவல் அறிக்கையில் என் மீதான குற்றச்சாட்டுகள் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. இவ்வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x