Published : 07 Nov 2018 02:43 PM
Last Updated : 07 Nov 2018 02:43 PM
டெல்லியில் குடிபோதையில் என்ன செய்வதென்று தெரியாமல், 4 கார்கள் உள்ளிட்ட 18 வாகனங்களுக்குத் தீ வைத்த போதை இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.
டெல்லியின் தெற்குப் பகுதியில் மதன்கிரி உள்ளது. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 4 கார்கள், 14 பைக்குகள் திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகிவிட்டதாக போலீஸாருக்கு அதிகாலை 3 மணிக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். இதையடுத்து, அங்கு மதன்கிரி போலீஸார் சென்று விசாரணை நடத்தியதில், வாகனங்களுக்குத் தீ வைத்தது யார் எனத் தெரியவில்லை எனக் குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, அப்பகுதியில் இருந்த பல்வேறு கண்காணிப்பு கேமிரா காட்சியை போலீஸார் ஆய்வு செய்தனர். அப்போது, அந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சியில் அதிகாலை 2 மணி அளவில் குடிபோதையில் ஒரு இளைஞர் தள்ளாடிக்கொண்டு வருகிறார். ஒரு இரு சக்கர வாகனத்தின் பெட்ரோல் டியூப்பையும் பிடுங்கிவிட்டு அதில் வரும் பெட்ரோலை பிடித்து பல்வேறு வாகனங்கள் மீது தெளித்து தீ தனது பாக்கெட்டில் இருந்து தீப்பெட்டியை எடுத்துத் தீ வைத்து வேடிக்கை பார்ப்பதும் போன்று காட்சிகள் பதிவாகி இருந்தது.
இரு சக்கர வாகனங்களில் பற்றிக்கொண்ட தீ அப்படி, கார்களுக்கும் பரவியது. போதையில் அந்த இளைஞர் வைத்த தீ 14 பைக்குகளையும், 4 கார்களையும் உருக்குலைத்தது. இதில் 6 மோட்டார் சைக்கிள்களும், 2கார்களும் மட்டும் பாதியளவு எரிந்த நிலையில் தீ அணைக்கப்பட்டது. மற்ற வாகனங்கள் அனைத்தையும் எரிந்து உருத்தெரியாமல் போயின.
18வாகனங்களுக்கும் தீ வைத்த இளைஞர் 20 வயதுக்குள் இருக்கலாம் என போலீஸார் தெரிவிக்கின்றனர். கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து, அந்த இளைஞரைத் தேடும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து போலீஸார் தரப்பில் கூறுகையில், மோட்டார் வாகனங்களுக்குத் தீவைத்த இளைஞர் குடிபோதையில் இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது. இந்த பகுதியைச் சேர்ந்தவரா, அல்லது போதை தலைக்கேறியதால், இதுபோன்ற செய்தாரா என்பது அவரைக் கைது செய்தபின்தான் தெரியும் எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT