Published : 23 Nov 2018 01:56 PM
Last Updated : 23 Nov 2018 01:56 PM
டிட்லி புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்பு நடவடிகைகளின்போது மிகச்சிறந்த முறையில் பணியாற்றியவர்களை அழைத்து ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் நேற்று பாராட்டுவிழா நடத்தியுள்ளார்.
கடந்த மாதம் வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் ஒடிசா மாநிலம் கோபால்பூர் அருகே அக்டோபர் 11 -ம் தேதி கரையைக் கடந்தது.
புயலால் ஏராளமான மரங்களும் மின்கம்பங்களும் சாய்ந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிரிழப்பு நேராமல் தவிர்க்கப்பட்டது. எனினும் இயல்புவாழ்க்கை முற்றிலும் செயலிழந்தநிலை உருவானது. நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். வெள்ள சேதம் சுமார் 2200 கோடி ரூபாய் என முதல்கட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.
இப்புயலின்போது மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டுவிழா நடத்த ஒடிசா அரசு முடிவு செய்தது. அதன்படி நேற்று (வியாழக்கிழமை) புவனேஸ்வரில் உள்ள மாநில தலைமைச் செயலகத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பேசுகையில்,‘‘டிட்லி புயல் பாதித்த பகுதிகளில் துணிச்சலோடும் அர்ப்பணிப்போடும் அயராத உழைப்பை செலுத்தி மக்கள் பணியாற்றிய சமூக செயற்பாட்டாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மீட்புப் பணிகளில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் துடிப்பாக செயல்பட்ட இளைஞர்கள் மற்றும் சில அரசுப் பணியாளர்கள் ஆகியோர் மேடையில் கவுரவிக்கப்பட்டுள்ளனர்.
மீட்புப் பணிகளில் மிகச்சிறந்த பங்களிப்பைத் தந்தவர்களை ''டிட்லி புயல் ஹீரோக்கள்'' என்று நான் அழைக்க விரும்புகிறேன்.
டிட்லி புயல் மற்றும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மழைவெள்ள பாதிப்புகளில் பெருத்த சேதாரம் ஏற்பட்டு வீடுகளை இழந்த 13 ஆயிரம் குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரவும் அரசு முடிவெடுத்துள்ளது''
இவ்வாறு ஒடிசா முதல்வர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT