Published : 14 Nov 2018 03:43 PM
Last Updated : 14 Nov 2018 03:43 PM

சிறையில் இருந்தபடியே மூத்த மகனை கட்சியில் இருந்து நீக்கினார் சவுதாலா: குடும்பத்தில் கடும் வாரிசுச்சண்டை

சிறை தண்டனை அனுபவித்து வரும் இந்திய தேசிய லோக்தள கட்சித் தலைவர் ஓம் பிரகாஷ் சவுதாலா, சிறையில் இருந்தவாறே தனது மூத்த மகன் அஜய் சிங் சவுதாலாவை கட்சியில் இருந்து நீக்கியுள்ளார். குடும்பத்தில் வாரிசு சண்டை உச்சகட்டத்தை எட்டியுள்ளதையடுத்து இந்த நடவடிக்கையை அவர் எடுத்துள்ளார்.

ஹரியாணா மாநிலத்தில் எதிர்கட்சியாக உள்ள இந்திய தேசிய  லோக்தளக் கட்சியின் தலைவராக முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா இருந்து வருகிறார். இவர், மறைந்த முன்னாள் துணைப் பிரதமர் தேவி லாலின் மகன் ஆவார். ஆட்சியில் இருந்தபோது ஆசிரியர் பணி நியமன மோசடியில் ஈடுபட்ட வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஓம் பிரகாஷ் சவுதாலாவும், அவரது மூத்த மகன் அஜய் சிங் சவுதாலாவும், டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இளைய மகன் அபே சவுதாலா எதிர்கட்சித் தலைவராக இருந்து கட்சியை நிர்வகித்து வருகிறார். ஆனால் அவரது தலைமையை எதிர்த்து அஜய் சிங் சவுதலாவின் மகன்கள் துஷ்யந்த் மற்றும் திக் விஜய் சவுதாலா ஆகிய இருவரும் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். இந்திய தேசிய லோக்தளக் கட்சியை உடைக்கவும், நவம்பர் 17-ம் தேதி தனிக்கூட்டம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டு  வருகின்றனர். இந்த நிலையில் சிறையில் இருந்து ஜாமினில் விடுதலையான அஜய் சிங் சவுதாலா தனது மகன்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறார். இதனால் சவுதாலா குடும்பத்தில் உச்சகட்ட வாரிசு உரிமை சண்டை நடந்து வருகிறது.

இருமகன்களின் குடும்பத்தினரும் ஒருவரையொருவர் கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றர். இதனால் டெல்லி திஹார் சிறையில் இருந்தபடியே ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது இரு பேரன்களான துஷ்யந்த் மற்றும் திக் விஜய் இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி சில நாட்களுக்கு முன்பு உத்தரவிட்டார்.

இதனிடையே தனது  மூத்த மகன் அஜய் சிங் சவுதாலாவையும் கட்சியில் இருந்து நீக்கி, ஓம் பிரகாஷ் சவுதாலா இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். சிறையில் இருந்து அவரது உத்தரவை பெற்று அறிக்கையாக இளையமகன் அபே சவுதாலாவும் மற்ற முன்னணி தலைவர்களும் இன்று வெளியிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x