Published : 02 Nov 2018 05:24 PM
Last Updated : 02 Nov 2018 05:24 PM
இறந்துவிட்டதாக நினைத்திருந்த நபர் உயிரோடு வந்ததால் அவரது உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ள ஓர் அதிசய நிகழ்ச்சி கேரள மாநிலத்தில் வயநாடு அருகே நடந்துள்ளது.
ஷாஜி, இவர் வயநாடு அருகே ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்தவர். சில மாதங்களுக்கு முன்பு இவர் வேலை தேடி வீட்டை விட்டுச் சென்று விட்டார். சென்றதோடு மட்டுமின்றி அதன்பிறகு வீட்டில் இருப்பவர்களோடு எந்தவிதத் தொடர்பும் வைத்துக்கொள்ளவில்லை.
குடும்பத்தினரோடு மீண்டும் எந்தத் தொடர்பிலும் இல்லாத ஒருவரை இறந்துவிட்டதாகவே கருத இடமளிக்கும் சம்பவம் ஒன்றும் நடந்தது. சமீபத்தில் கர்நாடகாவில் உயிரிழந்த உடல் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் இன்னும் யாரும் உரிமை கோரி வரவில்லையென்ற செய்தியும் ஷாஜி குடும்பத்தாருக்கு கிடைத்தது.
இறந்த உடலைக்குறித்து கேள்வியுற்ற குடும்பத்தினர் அங்கு சென்று பார்த்தனர். உயிரிழந்த அந்த உடல் சிதைந்திருந்ததால் ஒருவேளை நமது மகனாக இருக்கக்கூடும் என தவறாக ஊகம் செய்துகொண்டு தங்கள் வீட்டைச் சேர்ந்தவர்தான் என்று கூறினர். அதைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் 16ஆம் இறுதிச் சடங்குகளும் நடைபெற்றது.
இதற்கிடையில், ஷாஜியிடம் விசாரணை ஒன்றில் ஈடுபட்ட கர்நாடகா போலீசார் இறுதிச் சடங்கு நடத்தியது இவரின் உறவினர்தான் என்பதை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர்.
தன்னைப்பற்றிய எதிர்பாராத தகவலைக் கேள்வியுற்ற நிலையில் அவர் உடனே கேரளாவுக்கு திரும்பினார். இரண்டு நாட்களுக்கு முன் வீடு திரும்பிய ஷாஜி, தான் இறந்துவிட்டதாக அவர்கள் நம்பிவிட்டதையும் இறுதிச் சடங்குகூட நடத்திவிட்டதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இந்நிலையில் இறந்தவர் என்று நினைத்தவர் உயிருடன் வந்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT