Published : 11 Nov 2018 01:23 PM
Last Updated : 11 Nov 2018 01:23 PM
இன்னும் 4 மாதங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் ஆட்சி முடியப்போகும் சூழலில் ரிசர்வ் வங்கியின் முதலீட்டுக் கட்டமைப்பை நிர்ணயிக்க ஏன் அவசரம் காட்டுகிறது என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் இன்று மத்திய அரசே நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் பதிவிட்டு இருப்பதாவது:
மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் பதவிக்காலம் 4 ஆண்டுகள், 6 மாதங்கள் முடிந்துவிட்டது. இன்னும் 4 மாதங்கள் மட்டுமே இருக்கிறது. அப்படி இருக்கும்போது, ரிசர்வ் வங்கியின் முதலீட்டுக் கட்டமைப்பை நிர்ணயிக்க என்ன அவசரம் வந்துவிட்டது.
அரசுக்கு எந்தவிதமான பணமும் இந்த நிதிஆண்டில் தேவைப்படாவிட்டால், ரிசர்வ் வங்கிக்கு ஏன் கடந்த 4 மாதங்களாகத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. கடந்த 4 ஆண்டுகள், 6 மாதம் ஏன் மவுனமாக இருந்தார்கள்.
மத்திய அரசோ நிதிக்கணக்கீடுகள் சரியாக இருக்கிறது என்று கூறுகிறது. ரூ.70 ஆயிரம் கோடி கடன்பெறுவதை 2018-19-ம் ஆண்டு கைவிட்டிருப்பதாக தற்புகழ்ச்சியுடன் அரசு கூறுகிறது. அப்படி இருந்தால், ரிசர்வ் வங்கியின் இந்த ஆண்டு இருப்பில் இருந்து பணம் ஏன் தேவைப்படுகிறது. இவ்வாறு ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் வெளியிட்ட அறிக்கையில், ரிசர்வ் வங்கியிடம் இருந்து ரூ.3.60 லட்சம் கோடியோ அல்லது ரூ.ஒரு லட்சம் கோடியோ மத்திய அரசு கேட்கவில்லை. அவ்வாறு கேட்டதாக வரும் செய்திகள் தவறானவே. யூகத்தின் அடிப்படையில் செய்தி வருகிறது. நிதிப்பற்றாக்குறையை 5.1சதவீதத்தில் இருந்து 3.3 சதவீதமாகக் குறைத்திருக்கிறோம். இந்த நிதியாண்டில் ரூ.70 ஆயிரம் கோடி கடன் பெறுவதை குறைத்திருக்கிறோம் என்று விளக்கம் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT