Published : 05 Nov 2018 11:21 AM
Last Updated : 05 Nov 2018 11:21 AM

போலீஸாரின் கன்னத்தில் அறைந்த டெல்லி பாஜக தலைவர்; ஆம் ஆத்மி ஆதரவாளர்களுடன் ஏற்பட்ட மோதலால் கோபம்

டெல்லியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிக்னேச்சர் பாலத் திறப்பு விழாவில் போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் மனோஜ் திவாரி, அவர்களின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்ற பாலத் திறப்பு விழாவுக்காக எம்.பி.யும் மாநில பாஜக தலைவருமான மனோஜ் திவாரி அழைக்கப்பட்டிருந்தார். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் பாலத்தைத் திறந்து வைத்தார்.

திறப்பு விழாவுக்கு கேஜ்ரிவால் வருவதற்கு முன்பாக மனோஜ் திவாரி வந்தார். அப்போது ஆம் ஆத்மி ஆதரவாளர்களுக்கும் மனோஜ் திவாரி மற்றும் அவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. அதில் தலையிட்ட போலீஸார் மனோஜ் திவாரியைத் தனியே அழைத்து வர முயற்சித்தனர்.

அப்போது போலீஸாரின் கன்னத்தில் அறைந்தார் திவாரி. இதுதொடர்பான வீடியோவை ஏஎன்ஐ வெளியிட்டது. இது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இதற்கிடையே ஆம் ஆத்மி எம்எல்ஏ அமனத்துல்லா கான் தன்னைத் தள்ளிவிட்டதாக மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார். அதுதொடர்பான வீடியோவை டெல்லி பாஜக வெளியிட்டுள்ளது. இதுகுறித்து எப்ஐஆர் பதிவு செய்ய உள்ளதாக மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x