Last Updated : 23 Nov, 2018 12:09 PM

 

Published : 23 Nov 2018 12:09 PM
Last Updated : 23 Nov 2018 12:09 PM

60 ஆயிரம் ஆண்டு பழமையான நார்த் சென்டினல் தீவில் யார் வசிக்கிறார்கள்? அங்குச் செல்ல ஏன் அஞ்சுகிறார்கள்? தடை ஏன்?- ஓர் அலசல்

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் உள்ள மர்மமான நார்த் சென்டினல் தீவுக்கு பூர்வீக பழங்குடிகளான சென்டினல் மக்களைச் சந்திக்கச் சென்ற 26 வயது அமெரிக்க இளைஞர் ஜான் ஆலன் சாவ் சென்டினல் பழங்குடி மக்களால் கொல்லப்பட்ட சம்பவம்தான் கடந்த சில நாட்களாகத் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

உலகின் சத்தம் அறியாத, நாகரீகத்தின் தடம் அறியாமல் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வேற்றுநாகரீக மனிதர்களுடன் தொடர்பு இல்லாமல் வாழ்ந்து வருபவர்கள்தான் சென்டினல் பழங்குடியின மக்கள.

அந்தமான் தீவில் உள்ள இந்த சென்டினல் தீவு இந்திய அரசின் ஆவணங்களின்படி, ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகள் பழையானது. அங்குள்ள சென்டினல் பழங்குடியின மக்களின் பூர்வீகம் ஏறக்குறைய 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்று மத்திய அரசு ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்னும் ஆழமாகப் பார்த்தால், ஆப்பிரிக்காவில் உருவான முதல் மனித இனம், ஆசியாவுக்குள் வரும்போது, இந்த சென்டினல் மக்கள் வந்துள்ளார் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

எத்தனைத் தீவுகள்

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மிகச்சிறிய தீவான அந்தமானில், கிழக்கு தீவு, வடக்கு அந்தமான் தீவு, ஸ்மித் தீவு, கர்பியூ தீவு, ஸ்டீவர்ட் தீவு, லாண்ட்பால் தீவு, ஆவ்ஸ் தீவு, மிடில் அந்தமான், லாங் தீவு, ஸ்ட்ரய்ட் தீவு, நார்த் பாசேஜ், பாராட்டாங், சவுத் அந்தமான், ஹேவ்லாக், நிலத்தீவு, பிளாட் பே, லிட்டில் அந்தமான், சவுரா, டில்லாங் சாங் தீவு, தெரஸா, கட்சல், நான்கவுரி, கமோர்டா, புளோமில், கிரேட் நிகோபர், லிட்டில் நிகோபர், நார்கான்டம் தீவு, இன்டர்வியூ தீவு ஆகிய மிகச்சிறிய தீவுகள் உள்ளன.

தடைசெய்யப்பட்ட தீவு

அதிலும் அந்தமானில் உள்ள நார்த் சென்டினல் தீவு மத்திய அரசால் பாதுகாக்கப்பட்ட, மனிதர்கள் செல்ல தடை செய்யப்பட்ட தீவாகும். கடந்த 2017-ம் ஆண்டு மாநிலங்கள் அவையில் உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் இந்தத் தீவு குறித்துக் கூறுகையில், ஒட்டுமொத்த நார்த் சென்டினல் தீவு 59.67 சதுர கி.மீ. கடற்கரை 5 கி.மீ தொலைவு கொண்டது. இந்த தீவில் பூர்வீக பழங்குடிகளான சென்டினல் மக்கள் வசிப்பதால், அந்தமான் நிகோபர் தீவு பாதுகாப்புச் சட்டம் 1956-ன்கீழ் பாதுகாக்கப்பட்ட பகுதியாகும். தடையை மீறிச் செல்வோருக்கு தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

யார் இந்த சென்டினல் மக்கள்?

அந்தமானில் உள்ள நார்த் சென்டினல் தீவில் வசிக்கும் நெக்ரிட்டோ வகை பழங்குடி மக்களே நார்த் சென்டினல் மக்கள். இவர்கள் இதுவரை உலகில் மற்ற மனிதர்களோடு தொடர்பு இல்லாமல், வாழ்பவர்கள். கற்காலத்தில் மனிதர்கள் வாழ்ந்தபோது, கற்களை ஆயுதமாகவும், இலை, மரப்பட்டைகளையும் ஆடைகளாகவும் அணிந்தார்கள். அந்த வாழ்க்கை முறையை இன்னும் கடைப்பிடித்து வருபவர்கள். அந்தமானில் உள்ள ஜார்வா எனும் பழங்கு மக்களின் அடிப்படை உடற்கூறுகள் இந்த நார்த் சென்டினல் மக்களுக்கு உண்டு.

அந்தமானில் உள்ள இந்திய மானுடவியல் துறையின் கணக்கின்படி ஏறக்குறைய இந்த சென்டினல் மக்களின் பூர்வீகம் குறைந்தபட்சம் 30 ஆயிரம் ஆண்டுகளாகும். இந்தத் தீவில் ஏறக்குறைய 2 ஆயிரம் ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

எப்படி பாதுகாப்பட்டுள்ளனர் ?

அந்தமான் நிகோபர் தீவுகளை கடந்த 1956-ம் ஆண்டு பழங்குடி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்துள்ளது மத்திய அரசு. அந்தமானைச் சுற்றியுள்ள தீவுகளுக்குள்,குறிப்பாகப் பழங்குடி மக்கள் வாழும் பகுதிக்குள் மத்தியஅரசின் அனுமதியின்றி யாரும் செல்லக்கூடாது. அவர்களைப் புகைப்படம் எடுத்தல், வீடியோ எடுத்தல், உணவுப்பொருட்கள், உடைகள், உள்ளிட்டவை கொடுக்க முயற்சித்தல் குற்றமாகும், அபராதமும் விதிக்கப்படும்.

சென்டினல் பழங்குடிகள் எப்படிப்பட்டவர்கள்?

அந்தமான் தீவுகளில் அந்தமான் பழங்குடி மக்கள், கிரேட் அந்தமானிஸ், ஓங்காஸ், ஜார்வாக்கள், சென்டினல்கள் எனப் பலவகை பழங்குடி மக்கள் வசிக்கிறார்கள். அதில் சென்டினல்கள் பழங்குடி மக்கள் உலகின் பிற மனிதர்களின் தொடர்பின்றியும், நாகரீகத்தை அறியாமலும் வாழ்ந்து வருகிறார்கள்.

இதுவரை கடந்த 1991-ம் ஆண்டு இந்திய மானுவியல் துறை சார்பில் சென்ற குழுவை மட்டும் சென்டினல்கள் தாக்காமல் சந்தித்துள்ளனர். அவர்கள் அளித்த தேங்காய்களை மட்டும் பெற்றுக்கொண்டனர்.

மக்கள் தொகை எவ்வளவு?

கடந்த 1901 முதல் 1921-ம் ஆண்டுவரை ஆங்கிலேயர்கள் கணக்கின்படி,117 பேர் வரை வாழ்ந்துள்ளனர். அதன்பின் 1931-ம்ஆண்டு, அந்த எண்ணிக்கை 50 ஆகவும்,பின் 1991-ம் ஆண்டு 23 பேராகவும் சென்டினல் மக்கள் எண்ணிக்கை குறைந்தது. கடைசியாக 2001-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கில் 39 பேர் வாழ்ந்து வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது. ஆனால், மானுவியலாளர்கள் அங்கு 400 பேர் வரை வசிக்கக்கூடும் எனத் தெரிவிக்கிறார்கள்.

இதற்குமுன் வேறுமனிதர்களை சென்டினல்கள் தாக்கியுள்ளார்களா?

கடந்த 2006-ம் ஆண்டு அந்தமானைச் சேர்ந்த மீனவர்கள் சுந்தர் ராஜ்(48), பண்டிட் திவாரி(52) ஆகியோர் தங்கள் படகை சென்டினல் தீவில் நிறுத்தி சிறிதுநேரம் ஓய்வு எடுத்துள்ளனர். அப்போது திடீரென சென்டினல் பழங்குடி மக்கள் அந்த இரு மீனவர்கள் மீதும் கூர்மையான அம்புகளை எய்தி தாக்குதல் நடத்தியதில் இருவரும் கொல்லப்பட்டனர்.

அதன்பின் இரு மீனவர்களும் கொல்லப்பட்ட செய்தி அறிந்த இந்திய கடற்படையினர் இரு மீனவர்களையும் உடல்களையும் மீட்கச் சென்றபோது அவர்கள் மீதும் சென்டினல் பழங்குடிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் இரு மீனவர்கள் உடலை மீட்க முயன்றபோது, ஹெலிகாப்டர் மீது அம்பு வீசி தாக்குதல் நடத்தினார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமே கடைசியாக சென்டினல்களை எடுத்த படமாகும்.

உணவுகள், ஆயுதங்கள்

சென்டினல் மக்கள் இன்னும் வில் அம்புகளையும், கற்களால் ஆன ஆயுதங்களையும் தங்களின் பாதுகாப்புக்காகப் பயன்படுத்தி வருகின்றனர். இவர்களின் தாக்குதல் துல்லியம் 350 அடியாகும். அதாவது 350 அடியில் உள்ள பொருட்களையும் மிகத் துல்லியமாக தாக்கும் திறமை இவர்களிடம் இருக்கிறது. அதனால்தான் சென்டினல் பழங்குடி மக்களை நெருங்க மீனவர்கள், கடலோர படையினர் அஞ்சுகிறார்கள். சென்டினல் தீவில் இருக்கும் காட்டுப்பன்றி, தேன், பழங்கள், இலைகள், மீன், தேங்காய் உள்ளிட்ட உணவுப்பொருட்களை உண்டு வாழ்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x