

அமராவதியை உலகின் மிக அழகிய தலைநகராக உருவாக்க ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீர்மானித்துள்ளார். இதற்காக சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள பிரபல கட்டிடக்கலை நிறுவனங்கள் மூலம் திட்டமிடப்பட்டு வருகிறது.
இதில் ஆந்திர சட்டப்பேரவையின் இறுதி வடிவத்துக்கு சந்திரபாபு நாயுடு சமீபத்தில் ஒப்புதல் வழங்கியதாக, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நாராயணா அமராவதியில் நேற்று தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “உலகில் மிக உயரமான கட்டிடமாக அமராவதியில் சட்டப்பேரவை அமையவுள்ளது. 250 அடி உயரத்தில் நார்மன் ஃபோஸ்டர்ஸ் கட்டிட நிறுவனம் இதை வடிவமைத்துள்ளது.
இதில் 3 மாடிகளில் சட்டப்பேரவை நிறுவப்படும். நடுவில் உலகிலேயே உயரமான கோபுரம் (டவர்) அமைய உள்ளது. இதன் மொத்த உயரம் 250 மீட்டராகும். இதற்கான டெண்டர் வரும் டிசம்பர் மாதத்தில் வெளியாகும். இந்தக் கட்டிடம் 2 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்” என்றார்.
குஜராத்தில் 182 மீட்டர் உயர சர்தார் வல்லபபாய் படேல் சிலை சமீபத்தில் திறக்கப்பட்டுள்ளது. தற்போது இதுவே உலகின் மிக உயரமான சிலையாக உள்ளது. இதைவிட 68 மீட்டர் அதிக உயரம் கொண்டதாக ஆந்திர சட்டப்பேரவை கட்டிடம் அமையவுள்ளது.