Published : 06 Nov 2018 12:41 PM
Last Updated : 06 Nov 2018 12:41 PM

வாக்குவாதம் செய்த நபரை ஓடும் காரின் முன் தள்ளி கொன்ற போலீஸ் உயர் அதிகாரி: கேரளாவில் பயங்கரம்

நெய்யட்டின்கரா காவல்துறை உதவி கண்காணிப்பாளர் பி.ஹரிகுமார் மீது கேரள போலீஸ் கொலை வழக்கு செய்தது, வாகனம் நிறுத்துவது தொடர்பான வாக்குவாதத்தில் சனல் குமார் என்ற எலெக்ட்ரீஷியனை பிடித்துத் தள்ள அப்போது வந்த கார் இவர் மீது ஏறி சனல் குமார் பரிதாபமாகப் பலியானார்.

இந்தப் படுபாதகக் கொலை திங்கள் இரவு நடந்துள்ளது, இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து போலீஸ் உயரதிகாரி ஹரிகுமாரைக் காணவில்லை, அவருக்கு போலீஸார் வலைவீசியுள்ளனர்.

நடந்தது என்ன?

32 வயதான சனல் குமார் என்பவர் கொடங்கவிலாவில் எலெக்ட்ரீஷியனாக இருந்து வருகிறார். இவர் சம்பவ தினத்தன்று போலீஸ் உயரதிகாரி ஹரிகுமாரின் காருக்குப் பின்னால் தன் வாகனத்தை நிறுத்திவிட்டு உணவு விடுதிக்குச் செல்ல முயன்றார்.

தனது காரை எடுக்க இந்த வாகனம் இடைஞ்சலாக இருந்ததால் ஆத்திரம் அடைந்த போலீஸ் அதிகாரி ஹரிகுமார், எலெக்ட்ரீஷியன் சனல் குமாரை வாய்க்கு வந்தபடி வைதுள்ளார். உடனடியாக வாகனத்தை எடுக்க வேண்டும் என்று மிரட்டினார். வாகனத்தை சனல் குமார் அங்கிருந்து அகற்றும்போது ஏதோ வார்த்தைகளைக் கூற இருவருக்கும் வாக்குவாதம் மூண்டது. இதில் ஆத்திரம் அடைந்த ஹரிகுமார், சனல் குமார பிடித்துத் தள்ளினார், அப்போது அங்கு வேகமாக வந்த கார் சனல் குமார் மீது மோதியதில் தலையில் பயங்கர காயம் ஏற்பட்டது.

சனல் குமாரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், பிறகு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் அங்கு அவர் கொண்டு செல்லப்படும்போதே இறந்து விட்டதாக மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் அறிவித்தனர்.

போலீஸ் அதிகாரி ஹரிகுமாரை பொதுஜனங்கள் பிடிக்க முயன்றனர், ஆனால் அவர் எப்படியோ அவர்களிடமிருந்து தப்பித் தலைமறைவானார். ஹரிகுமார் மஃப்டியில் இருந்துள்ளார், அங்கு தன் உறவினர் வீடு ஒன்றுக்கு வந்தபோதுதான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இந்தச் சம்பவத்தையடுத்து உயரதிகாரியைக் கைது செய்யுமாறு உள்ளூர் மக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு, கடையடைப்புப் போராட்டமும் நடத்தினர்.

முதல்வர் பினராயி விஜயன், அந்த உயரதிகாரி ஹரிகுமார் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தார். அரசு இந்தச் சம்பவத்தை மிகவும் சீரியசாகப் பார்ப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்தச் சம்பவத்தினால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x