Published : 12 Nov 2018 03:10 PM
Last Updated : 12 Nov 2018 03:10 PM
உத்தரப் பிரதேசத்தின் ஷாம்லி மாவட்டத்தில் வசிக்கும் தலித் பிரிவைச் சேர்ந்த 25 பேர் தங்கள் சமூகத்திற்கு எதிராக பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறி புத்த மதத்தைத் தழுவினர்.
தலித் தலைவர் தேவிதாஸ் ஜெயந்த் இம்மத மாற்றத்திற்கு முக்கிய காரணியாக செயல்பட்டவர். இம்மத மாற்றம் குறித்து அவர் இன்று (திங்கள்கிழமை) பிடிஐயிடம் தெரிவிக்கையில், ''எங்கள் சமூகத்தினர் மீது தொடர்ந்து பாகுபாடுகளும் வன்கொடுமைகளும் நடைபெற்று வருகின்றன. இதை எதிர்ப்பதற்கு எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அதனாலேயே இவர்கள் மதம் மாறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டேன்'' என்றார்.
மத மாற்ற நிகழ்ச்சியில் சம்பிரதாய நடைமுறைகளை போத் பிக்ஷூ பாந்தே பெர்க்யாஷில் என்பவர் முன்னின்று நடத்திவைத்தார்.
முசாபர்நகர் காவல்துறை அதிகாரி ராஜேஷ் குமார் திவாரி இதுகுறித்து தெரிவித்துள்ள கருத்து வருமாறு:
எந்தவொரு கட்டாயத்தின் பேரிலும் இந்த நிகழ்ச்சி இடம்பெறவில்லை. எவருக்கும் தாங்கள் விரும்பும் எந்த மதத்தை பின்பற்றுவதற்கு அனைவருக்கும் சுதந்திரம் உண்டு.
இவ்வாறு காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT