Last Updated : 21 Nov, 2018 09:10 AM

 

Published : 21 Nov 2018 09:10 AM
Last Updated : 21 Nov 2018 09:10 AM

1,398 விவசாயிகளின் ரூ.4 கோடி வேளாண் கடனை செலுத்திய அமிதாப் பச்சன்

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆயிரத்து 398 விவசாயிகளின் வேளாண் கடன் ரூ.4.05 கோடியை வங்கியில் திருப்பிச் செலுத்தியுள்ளதாக இந்தி நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட வறட்சியால் வங்கியில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் விவசாயிகள் தற்கொலை செய்து வந்தனர். அதில் 350 விவசாயிகளின் கடனை வங்கியில் செலுத்தி அவர்களைத் தற்கொலையில் இருந்து நடிகர் அமிதாப் பச்சன் காத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 1,398 விவசாயிகளின் வங்கிக் கடனையும் அடைத்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் அமிதாப் பச்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

''உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 1,398 விவசாயிகள் வங்கியில் வாங்கியிருந்த வேளாண் கடனை நான் திருப்பிச் செலுத்தியுள்ளேன். இந்தக் கடன் தொகையின் மதிப்பு ரூ.4.05 கோடியாகும். அதுமட்டுமல்லாமல் குறிப்பிட்ட 70 விவசாயிகளை மும்பைக்கு அழைத்து வந்து என்னைச் சந்திக்கச் செய்து உதவினேன்.

வறுமையில் வாடும் விவசாயிகளை மீட்கவும், அவர்களின் சுமையைக் குறைக்கவும் என்னால் முடிந்த உதவிகளைத் தொடர்ந்து செய்வேன். முதலில் மகாராஷ்டிரா மாநிலத்தில் 350 விவசாயிகள் கடன் அடைக்கப்பட்டது. இப்போது, உத்தரப் பிரதேச மாநிலத்தில் 1,398 விவசாயிகள் கடன் நிலுவைத் தொகை அடைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயிகள் மனதில் அமைதியும் ஏற்படும். விருப்பமும் நிறைவடையும்''.

இவ்வாறு நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

அமிதாப் பச்சனின் செயலுக்கு நெட்டிசன்கள் சார்பில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x