Published : 17 Nov 2018 12:15 PM
Last Updated : 17 Nov 2018 12:15 PM
காங்கிரஸ் கட்சியில் நேரு குடும்பத்தைத் தவிர்த்து யாரெல்லாம் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள் என்ற பட்டியலை பிரதமர் மோடிக்கு ட்விட்டர் மூலம் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சத்தீஸ்கரில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சிக்கு 5 ஆண்டுகள் நேரு குடும்பத்தைத் தவிர்த்து வேறு யாரையாவது தலைவராக நியமித்து இருக்கிறார்களா, நியமிக்க தயாராக இருந்திருக்கிறார்களா என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்குச் சவால் விட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் நிதி அமைச்சருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
சுதந்திரத்துக்குப் பின், காங்கிரஸ் கட்சியில் எளிய பின்னணியைக் கொண்ட பலர் தலைவர்களாக வந்திருக்கிறார்கள். பாபசாகேப் அம்பேத்கர், லால் பகதூர் சாஸ்திரி, கே.காமராஜ், மன்மோகன் சிங், ஆச்சார்யா கிரிபாலினி, பட்டாபி சீதாரமையா, புருஷோத்தம்தாஸ் டான்டன், யு.என்.தேபர், சஞ்சிவா ரெட்டி, சஞ்சிவையா காமராஜ், நிஜலிங்கப்பா, சி.சுப்பிரமணியன், ஜக்ஜீவன் ராம், சங்கர் தயால் சர்மா, டி.கே. பரூஹா, பிரம்மானந்தா ரெட்டி, பி.வி. நரசிம்ம ராவ், சீதாராம் கேசரி ஆகியோர் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள். சுதந்திரத்துக்கு முன்பும் பலர் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பதைப் பிரதமர் மோடிக்கு நினைவு படுத்துகிறோம்.
காங்கிரஸ் தலைவர் தேர்வு குறித்து பிரதமர் மோடி மிகுந்த கவலையும், அக்கறையும் கொண்டு, அதைப்பற்றிப் பேச அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார். அது குறித்து பேசும் நேரத்தில் பாதி நேரத்தில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, ரஃபேல், சிபிஐ, ஆர்பிஐ ஆகியவை குறித்து பிரதமர் மோடி பேசலாம்.
விவசாயிகள் தற்கொலை, இளைஞர்கள் வேலையின்மையால் அவதிப்படுவது, கும்பல் வன்முறை, பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமைகள், ஆன்ட்டி ரோமியோ படை, பசு குண்டர்கள் வன்முறை, அதிகரித்து வரும் தீவிரவாத தாக்குதல்கள் ஆகியவை குறித்தெல்லாம் பிரதமர் மோடி பேசுவாரா?
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT