Published : 05 Nov 2018 10:49 AM
Last Updated : 05 Nov 2018 10:49 AM
சபரிமலையில் சித்திரை திருநாள் ஆட்ட விசேஷம் பூஜைக்காக இன்று மாலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது. வழிபாடு நடத்த குவிந்துள்ள பக்தர்கள் சபரிமலை செல்ல தொடங்கியுள்ளனர். இதையடுத்து பெண் போலீஸார் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் எல்லா வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்புக்குப் பின்னர் கடந்த மாதம் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்பட்டது.அப்போது, பெண்கள் பலர் சபரிமலைக்கு வந்தனர். அவர்களை ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்பினரும் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பதற்றம் ஏற்பட்டது.
ஐந்து நாட்களுக்குப் பிறகு நடை மூடப்பட்டது. இந்நிலையில், சித்திரை திருநாள் ஆட்ட விசேஷ பூஜைக்காக இன்று ஒருநாள் சபரிமலை நடை திறக்கப்படுகிறது. மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும்.
சபரிமலைக்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். எனவே, சபரிமலைக்கு பெண்கள் வரக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி வந்தால் அசம்பாவிதங்கள் எதுவும் நேராமல் தடுக்க, சபரிமலையைச் சுற்றியுள்ள பம்பா, நிலக்கல், இலவங்கல், சன்னிதானம் போன்ற பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு நேற்று நள்ளிரவு முதல் நாளை (6-ம் தேதி) நள்ளிரவு வரை அமலில் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கூடுதல் டிஜிபி, 2 ஐஜி.க்கள் தலைமையில் பெண் போலீஸார் உட்பட 2,000 போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சபரிமலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், சன்னிதானம் மற்றும் பம்பா, நிலக்கல் அடிவார முகாம்களில் 20 பேர் கொண்ட கமாண்டோ படையும் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.சபரிமலைக்கு வரும் பெண்களைப் போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தினால், அவர்களை தடுப்பு காவலில் வைக்க போலீஸாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பக்தர்களுக்கு அனுமதி
பக்தர்கள் பம்பா, நீலிமலை, அப்பாச்சிமேடு வழியாக சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை முதல் நிலக்கலில் இருந்து சோதனைக்கு பிறகு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். காலையில் இருந்து பக்தர்கள் பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் நோக்கி செல்லத் தொடங்கியுள்ளனர்.
ஊடகங்களுக்கு கட்டுப்பாடு
சபரிமலை கோயில் தொடர்பாக செய்திசேகரிக்க வரும் பத்திரிகையாளர்கள், ஊடகவியாலாளர்கள் பம்பையை தாண்டி செல்ல அனுமதி இல்லை என போலீஸார் அறிவித்துள்ளனர். இதனிடையே சபரிமலை தொடர்பாக செய்தி சேகரிக்க பெண் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களை அனுப்ப வேண்டாம் என இந்து அமைப்புகள் ஊடங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT